ரஜினி, கமலுக்கு அடுத்து அரசியலில் நுழைய காத்திருப்பவர் நடிகர் விஷால். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களமிறங்கிய அவர் கடைசி நேர குளறுபடியால் போட்டியிடாமலேயே வெளியேறினார். அந்தத் தேர்தல் முதல் அதிமுகவுக்கும் விஷாலுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தன்னுடைய டுவிட்டரில் நடிகர் விஷால் வெளியிட்டுள்ள ஒரு பதிவு, அதிமுகவைச் சீண்டுவதுபோல அமைந்துள்ளது. "ஒரு கட்சியால் மற்றுமொரு செய்தி ஒளிவழி தொடங்கப்பட்டுள்ளது. ஒரு செய்தி சேனல் ஆரம்பிக்க நிறைய செலவாகும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனால், மாதச் சம்பளம் வாங்கும் எம்எல்ஏ, எம்பிக்கள் எப்படி இதுபோன்ற ஒரு வியாபார அமைப்பைத் தொடங்க முடிகிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக கட்சியின் அதிகாரபூர்வ தொலைக்காட்சி செய்தியாக 'ஜெ' எனும் செய்தி ஒளிவழி ஒன்று அண்மையில் தொடங்கப்பட்டிருக்கிறது. அதேநாளில்தான் நடிகர் விஷால் இந்தக் கருத்தைப் பதிவிட்டுள்ளார். எனவே, அதிமுகவைத்தான் விஷால் குறிப்பிடுகிறார் என்று அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.