நித்திஷ் செந்தூர்
தொடக்கப்பள்ளியில் நாம் அனைவரும் ஆத்திசூடியைப் பயின்று இருப்போம். ஆனால் நம்மில் எத்தனை பேர் அதனை முழுமையாக நினைவுகூர்ந்து சொல்ல முடியும்? ஆத்திசூடியை நினைவுகூரும் வகையிலும் அதனை இளம் பிள்ளைகளிடம் அறிமுகம் செய்யும் நோக்குடனும் 'ஆத்திசூடி இயக்கம்' எனும் காணொளிப் பாடலைச் சிங்கப்பூர்த் தம்பதியரான ஷம்ரோஸ் கான், சிவரஞ்சனி இருவரும் தயாரித்து வெளியிட்டு உள்ளனர். இசை தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் ஷம்ரோஸ் கான், சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளுடன் சுமார் 8 ஆண்டுகள் பணியாற்றி, இசையின் வாயிலாக அவர்களின் தொடர்புத் திறன் மேம்பாட்டிற்குப் பங்காற்றி வருகிறார்.
ஒரு புது முயற்சியாக 'ஆத்திசூடி' காணொளிப் பாடலில் இப்பிள்ளைகளைத் தோன்ற வைத்து, அவர்களுக்குத் தன்னம்பிக்கை அளித்துள்ளார் ஷாம் ரோஸ். சிங்கப்பூர், மலேசியா, இந்தியாவைச் சேர்ந்த 32 இசைக் கலைஞர்கள் தங்களின் பங்களிப்பை இப்பாடலுக்கு வழங்கியுள்ளனர். சுமார் 120 பேர் இடம்பெற்ற இக் காணொளிப் பாடலில் 50 விழுக்காட்டினர் சிறப்புத் தேவையுடைய பிள்ளைகள்.