தமிழில் 'தாம்தூம்' படத்தில் ஜெயம்ரவி ஜோடியாக நடித்தவர் கங்கனா ரனாவத். இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். 'குயீன்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர். இந்நிலையில் மும்பையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கங்கனா ரனாவத் கலந்துகொண்டு பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. "நான் சினிமாவில் இப்போது முன்னணி நடிகையாக இருக்கிறேன். என் வளர்ச்சி மட்டும்தான் எல்லோருக்கும் தெரிகிறது. இந்த இடத்துக்கு வருவதற்கு நான் பட்ட கஷ்டங்கள் ஏராளம். "இந்த நிலையை அடைய பத்து ஆண்டுகளாகப் போராடினேன். பல்வேறு அவமானங்களைச் சந்தித்தேன். அதனால் பலரால் புறக்கணிக்கப்பட்டேன். என்னை ரொம்பவே சங்கடப்படுத்தினார்கள். உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டேன்.
"இவை என்னை மனதளவில் பக்குவப்படுத்தின. நமக்கு வெற்றி எதையும் கொடுத்துவிடாது. ஆனால் தோல்விகளோ நல்ல பாடங்களைக் கற்றுத்தரும். "தோல்விகளும் கஷ்டங்களும் எனக்கு முன்னேற வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்தன. வெகுவாக நம்பிக்கை ஊட்டின. அதன் காரணமாக அவற்றில் இருந்து இப்போது மீண்டு வந்து இருக்கிறேன். "எல்லோருமே வெற்றி தோல்வியை சந்திக்கிறோம். எதுவும் இறுதியானது அல்ல என்பதை உணரவேண்டும். குழந்தைகளுக்கு தோல்வியை சந்திக்கும் மனப்பக்குவத்தை பெற்றோர் ஏற்படுத்த வேண்டும். "பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகம் நடக்கின்றன. எனது சகோதரி மீது கூட திராவக வீச்சு நடந்தது.
"பெண்களால் நிராகரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை ஆண்களுக்கு வரவேண்டும். அதை ஏற்றுக் கொள்ளாதபோதுதான் இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடுகிறார்கள். என் வாழ்க்கையைப் புத்தகமாக எழுத முடிவு செய்துள்ளேன்," என்று கங்கனா ரனாவத் அந்த நிகழ்வில் பேசினார். மேற்கூறியவற்றில் பலவற்றை ஏற்கெனவே பல பேட்டிகளில் அவர் கூறியுள்ளார். எனினும் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளிப்படையாகப் பேசியதால்தான் தற்போது மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.