சிங்கப்பூரின் தலைமைச்சட்ட அதிகாரிக்கும் மலேசியாவின் தலைமைச்சட்ட அதிகாரிக்கும் இடையே சந்திப்பு நிகழ்ந்திருப்பதாக சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு தெரிவித்திருக்கிறது. சிங்கப்பூருக்கு விநியோகிக்கப்படும் தண்ணீரின் விலை குறித்த இரு நாடுகளின் நிலைப்பாட்டைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கலந்துரையாடல் தேவைப்படுவதாக இரு நாடுகளின் பிரதமர்களும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு நிகழ்ந்ததாக அமைச்சு கூறியது.
ஆயினும், மலேசியாவுடன் கடந்த ஆண்டு டிசம்பர் நடத்தப்பட்ட சந்திப்பின்போது புதிய சர்ச்சைகள் ஏற்பட்டதாகவும், அதனால் பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்பட்டதாகவும் அமைச்சு கூறியது. ஜோகூர் பாருவின் துறைமுக எல்லை, சிலேத்தார் விமான நிலையத்தின் தரையிறங்கும் முறை ஆகியவை தொடர்பில் சர்ச்சைகள் எழுந்ததை அமைச்சு சுட்டியது.
சிங்கப்பூருக்கு விநியோகிக்கப்படும் தண்ணீரின் விலை குறித்த பேரப்பேச்சுகள் கடந்த மாதம் நிகழ்ந்ததாக மலேசிய வெளியுறவு அமைச்சர் சயிஃபுடின் அப்துல்லா தெரிவித்ததன் தொடர்பில் கேட்கப்பட்டதற்கு சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு அவ்வாறு கூறியது.