ஓரறை வாடகை வீட்டில் குடியிருக்கும் 24 வயது உமா நந்தினி பியோனாவுக்கு சென்ற ஆண்டு கிடைத்த $300 ஜிஎஸ்டி உதவித் தொகை கட்டணங்களைச் செலுத்த உதவியாக இருந்தது.
இருநூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்த ஆண்டும் குறைந்த வருமான குடும்பங்களுக்கு இந்த உதவி அறிவிக்கப்பட்டிருப்பதில் அவருக்கு மகிழ்ச்சி.
"பல சிங்கப்பூரர்களுக்கு அத்தியாவசிய செலவுகளைச் சமாளிக்க இத்தொகை உதவும்," என்ற ஒற்றைப் பெற்றோரான உமா, எடுசேவ் கணக்கில் கூடுதலாக நிரப்பப்படும் $150 தற்போது இரண்டாம் வகுப்பில் பயிலும் எனது மகளின் கல்விச் செலவுக்கும் பள்ளி முகாம் செலவுக்கும் துணைபுரியும்," எனக்கூறினார்.
இருநூற்றாண்டு நிறைவு போனசாக சிங்கப்பூரர்கள் இந்த ஆண்டு மொத்தம் $1.1 பில்லியன் தொகையைப் பகிர்ந்துகொள்வர்.
குறைந்த வருமானம் ஈட்டும் 1.4 மி. சிங்கப்பூரர்களுக்கு ஜிஎஸ்டி பற்றுச் சீட்டாக அதிகபட்சம் $300 வரை கிடைக்கும்.
வேலைநலன் துணை வருமானத் திட்டத்தின்மூலம் பலனடைந்து வரும் குறைந்த வருமான ஊழியர்களுக்கு இருநூற்றாண்டு நிறைவு போனசாக கூடுதலாக 10% தொகை கிடைக்கும்.
வருமான வரி செலுத்தும் உள்ளூர்வாசிகள் அனைவருக்கும் 50% வரிக் கழிவு (அதிகபட்சம் $200) வழங்கப்படும்.
எடுசேவ் கணக்கில் கூடுதலாக $150, உயர்நிலைக் கல்விக்கு மேல் பயில்வோருக்கான 'பிஎஸ்இஏ' கணக்கில் $500 கிடைக்கும்.
மத்திய சேம நிதிக் கணக்குகளில் குறைவான தொகையைக் கொண்டுள்ள முதிய சிங்கப்பூரர்களுக்கு அதிகபட்சம் $1,000 வரை அவர்களது கணக்குகளில் பணம் நிரப்பப்படும்.