புதுடெல்லி: இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், "தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியா விடம் ஒப்படைக்க மாட்டோம்," என்று அறிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில், "1971ஆம் ஆண்டு சட்டப்படி இங்கிலாந்தில் இருக்கும் தனி நபர் ஒருவர் செல்லத்தக்க பாஸ் போர்ட் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் மல்லையா மீதான குற்றச்சாட்டின் தீவிரத்தின் அடிப்படையில் இந்தியாவுக்கு உதவ இங்கிலாந்து அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.
இந்தியா பரஸ்பரம் சட்ட உதவி மூலமாகவோ அல்லது பிடித்து ஒப்படைக்கும்படி கேட்டுக் கொண்டாலோ அது பற்றி பரிசீலனை செய்யப்படும் என்று இங்கிலாந்து அறிவித்துள்ளது. இங்கிலாந்தின் இந்த அறிவிப்பு சற்று பின்னடைவாகக் கருதப்பட்டாலும் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வந்துவிட முடியும் என்று கூறப் படுகிறது. இந்தியா-இங்கிலாந்து நாடுகளிடையே பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம் 1992ஆம் ஆண்டு செய்யப்பட்டுள்ளது.