சீனாவிலுள்ள ஹுபெய் மாநிலத்தில் மக்கள் கூட்டத்திற்குள் தனது காரைச் செலுத்தி ஆறு பேரைக் கொன்ற ஆடவரை அந்நாட்டு போலிசார் சுட்டுக் கொன்றனர். அந்த ஆடவர் வேண்டுமென்றே கூட்டத்தின்மீது மோதியதாக சீனாவின் அரசாங்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆயினும், அவர் ஏன் அவ்வாறு செய்தார் என்பது கூறப்படவில்லை.
சாவ்யாங் நகரில் நிகழ்ந்த தாக்குதலில் காயமடைந்த மேலும் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சீனாவில் இது போன்ற ஒரு சம்பவம் கடந்தாண்டு செப்டம்பரில் நடந்தது. தென் சீனாவில் ஒருவர் தனது காரை மக்கள் கூட்டத்தின்மீது வேண்டுமென்றே மோதவிட்ட சம்பவத்தில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர். பிறகு அந்த ஓட்டுநர் தனது காரைவிட்டு இறங்கி, சுற்றியிருந்தவர்களைக் கத்தியால் தாக்கினார். தன் மீது சுமத்தப்பட்டுள்ள தவறான குற்றச்சாட்டுகளால் இதனைச் செய்ததாக அவர் பின்னர் போலிசாரிடம் கூறினார்.