நீதித்துறையை அவமதித்த குற்றத் துக்காக சமூக ஆர்வலர் ஜோல வன் வாமுக்கும் எதிர்க்கட்சி அரசியல்வாதி ஜான் டான் லியாங் ஜூவுக்கும் தலா $5,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இருவரும் அவரவர் ஃபேஸ்புக் பக்கங்களில் சிங்கப்பூரின் நீதித் துறையை அவமதிக்கும் வகையில் கருத்துகளைப் பதிவேற்றம் செய்திருந்தனர்.
தாம் பதிவேற்றம் செய்த கருத்து குறித்து ஜோலவன் வாம் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றும் அதை நீக்க மறுத்ததையும் நீதிபதி சுட்டினார்.
இந்த வழக்கு தொடர்பாகக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அவரைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தபோதும் வாம் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டதாக நீதிபதி கூறினார்.
தாம் பதிவேற்றம் செய்த கருத் தை டான் ஃபேஸ்புக்கிலிருந்து நீக்கியபோதும் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நீதித்துறையை அவமதிக்கும் கருத்தை அவர் ஃபேஸ்புக்கி லிருந்து அப்புறப்படுத்தியதால் அவர் அதற்கு வருத்தம் தெரி விப்பதாக ஆகிவிடாது என்றார் நீதிபதி.
"தமக்கு அபராதம் விதிக்கப் படக்கூடாது என்பதற்காக அவர் கடைசி நேரத்தில் ஃபேஸ்புக் பதிவை நீக்கினார்," என்று நீதிபதி கூறினார்.
வழக்கு விசாரணைக்கான $6,966 செலவை டான் ஏற்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
வாம் $7,298 செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப் பட்டது. தீர்ப்பை எதிர்த்து இருவரும் மேல்முறையீடு செய்வர் என்று வழக்கறிஞர் யூஜின் துரைசிங்கம் தெரிவித்துள்ளார்.
அரசியல் தொடர்பான வழக்கு களில் மலேசியாவைப் போல சிங்கப்பூரின் நீதிமன்றங்கள் சுதந்திரமாகச் செயல்படுவதில்லை என்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் தேதியன்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வாம் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து அவருக்கு எதிராக தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் வழக்கு தொடுத்தது.
தலைமைச் சட்ட அதிகாரியின் இந்தச் செயல் வாம் குறிப்பிட்டதை உறுதி செய்வதாக சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த டான் கடந்த ஆண்டு மே மாதம் 6ஆம் தேதி தெரிவித்திருந்தார்.