ரேபரேலி: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றத் தேர்தல், நான்கு கட்டங்களாக முடிவடைந்த நிலையில், எஞ்சிய தொகுதிகளுக்கு இம்மாதம் 6,12,19 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது.
இதையடுத்துக் காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளின் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி சார்பாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிரியங்கா, நேற்று சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்பகுதியில் வசிக்கும் பாம்பாட்டிகளுடன் கலந்துரையாடினார்.
இதில் அவர்களது அன்றாடத் தேவை மற்றும் குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது பாம்பாட்டிகள் வைத்திருந்த பாம்புகளைக் கையில் எடுத்துப் பார்த்தும், தனது கால்களுக்குக் கீழ் இருக்கும் பாம்பை எடுத்தும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
சிறிதும் பயமின்றி கூடையில் இருந்த பாம்புகளைத் தொட்டுப் பார்த்தபடியே பாம்பாட்டிகளிடம் உரையாடினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பிரியங்கா கூறுகையில், "பாஜக, காங்கிரசின் கருத்துகள் தேர்தலுக்கு அப்பாற்பட்டவை.
"நாங்கள் எப்போதும் அவர்களுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறோம்.
"அரசியலில் பாஜக தான் எங்கள் எதிரி. ஒருபோதும் பாஜகவிற்குச் சாதகமான சூழல் உருவாக நாங்கள் விடமாட்டோம்.
"ஏனென்றால் வலிமையான, உறுதியான வேட்பாளர்களை நாங்கள் கொண்டுள்ளோம். மேலும் கடுமையாகப் போராடுவோம்," எனக் கூறினார்.