புதுடெல்லி: வாட்ஸ்அப் போன்றே செயல்படக்கூடிய போலி செயலிகளின் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்துள்ளது. இவற்றில் வாட்ஸ்அப்பில் உள்ளது போன்று கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. எனவே தேர்தல் சமயத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும் இந்தப் போலிச் செயலிகளைப் பயன்படுத்தி தங்கள் வசதிக்கேற்ப பல்வேறு தகவல்களைப் பலருக்கும் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இன்றி அனுப்புகின்றனர்.
'ஜேடிவாட்ஸ்அப்', 'ஜிபிவாட்ஸ்அப்' ஆகிய பெயர்களிலான இந்தச் செயலிகள் ஒவ்வொன்றும் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. வாட்ஸ்அப்பில் உள்ள அதே வசதிகள் இந்தச் செயலிகளில் இருப்பதோடு ஆயிரக்கணக்கானோருக்கு ஒரே நேரத்தில் செய்திகள் அனுப்ப முடிகிறது என்பதால் இந்தியாவின் முக்கிய அரசியல் கட்சியினர் இதுபோன்ற மென்பொருளைப் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
போலிச் செயலிகள் மூலம் போலியான, அவதூறுகள் பரவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. வாட்ஸ்அப் பயனரால் ஒரு தகவலை ஐந்து பேருடன் மட்டுமே பகிர்ந்துகொள்ள முடியும். ஆனால், போலிச் செயலிகள் மூலம் அதே தகவலை ஆயிரம் பேருக்கு அனுப்ப முடியும்.