போதைப்பொருளுக்கு எதிரான சிங்கப்பூரின் கொள்கைகளுக்குப் பொதுமக்களின் ஆதரவு வலுவாக இருந்தபோதும் இளையர்கள் மற்ற போதைப்பொருட்களைக் காட்டிலும் கஞ்சா (cannabis) குறித்து தாராள மனப்போக்குடன் இருப்பதாக அண்மை கருத்தாய்வு ஒன்று குறிப்பிடுகிறது. உள்துறை அமைச்சின் ஏற்பாட்டில் கடந்தாண்டு செய்யப்பட்ட தேசிய அளவிலான கருத்தாய்வு ஒன்றில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 13 வயதுக்கும் 75 வயதுக்கும் இடைப்பட்ட 2,000 சிங்கப்பூர் வாசிகள் இந்தக் கருத்தாய்வில் பங்கேற்றனர்.
13 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் இதர வயதினரைக் காட்டிலும் கஞ்சா பயன்பாடு குறித்து தாராள மனப்போக்குடன் இருப்பதாகக் கருத்தாய்வு குறிப்பிடுகிறது. கஞ்சா உடல்நலத்திற்குக் கேடு விளைவிப்பதாக இளையர்களில் 68 விழுக்காட்டினர் நினைக்கின்றனர். முப்பது வயதுக்கு மேற்பட்டோரில் 84 விழுக்காட்டினர் இதே கருத்தைக் கொண்டுள்ளனர்.
சிங்கப்பூரில் கஞ்சாவின் மீதான தடை தொடர்ந்து நீடிக்கவேண்டும் என்று 30 வயதுக்கும் அதிகமானோரில் 84 விழுக்காட்டினர் நினைக்கின்றனர். இளையர்களில் 80 விழுக்காட்டினர் அவ்வாறு நினைப்பதாகக் கூறுகிறது கருத்தாய்வு.போதைப்பொருளுக்கு எதிரான சிங்கப்பூரின் கடுமையான சட்டங்கள் தொடர்வதை 98 விழுக்காட்டினர் ஆதரிக்கின்றனர்.
போதைப்பொருளின் கேடுகளைப் பற்றிய விழிப்புணர்வும் போதைப் புழங்கிகளுக்கான மறுவாழ்வு முயற்சிகளும் முக்கியம். அதே வேளையில் போதைப்பொருளுக்கு எதிரான கடுமையான சட்டங்களையும் சட்ட அமலாக்கத்தையும் சிங்கப்பூர் கட்டிக்காக்கவேண்டும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்திருக்கிறார்.