நாடுகள் எதிர்நோக்கும் சவால் களைத் திறம்பட சமாளிக்க அவை ஒன்றிணைந்து தொழில் நுட்பத் திறன்களை உருவாக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியுள்ளார்.
சீனாவில் புத்தாக்கம் தொடர்பான கருத்தரங்கில் பேசிய அவர், இருதரப்பு ஒத்துழைப்பு மன்றம், புதிய சிங்கப்பூர் - ஷங்காய் முழுமையான ஒத்துழைப்பு மன்றம் போன்றவை மூலம் சீனாவுடன் இணைந்து சிங்கப்பூர் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராயும் என்றார். இந்த இரு மன்றங்களுக்கும் திரு ஹெங் இணைத் தலைவராக உள்ளார்.
உலகெங்குமுள்ள அறிவியல் அறிஞர்கள், புத்தாக்க வல்லுநர் களுடன் இணைந்து செயல்படு வதற்கான வாய்ப்புகளை நாம் ஆராய வேண்டும், ஆராய முடியும் என்று அவர் கூறினார்.
நாடுகளுடன் இணைந்து செயல்படுவதன் மூலமே உணவுப் பாதுகாப்பு, அதிகரித்து வரும் புற்றுநோய் சம்பவங்கள் போன்ற பிரச்சினைகளை நாம் சமாளிக்க முடியும்.
ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்படும் உறுதியான நடவடிக்கைகள் அடங்கிய மூன்று உத்திகளைக் கொண்டது சிங்கப்பூரின் அணுகு முறை. இதன் மூலம் தொழில்நுட்பம் வழங்கங்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்துவதை சிங்கப்பூர் இலக்காகக் கொண்டுள்ளது. இது முதல் உத்தி என்று தேசிய ஆய்வு அறநிறுவனத்தின் தலைவருமான திரு ஹெங் கூறினார்.
சமூகம் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள், புத்தாக்கம் தொடர்பாக முழுமையான அணுகு முறையைக் கொள்வது ஆகியவை மற்ற உத்திகள் என்றார் அவர்.