சிங்கப்பூரில் பதிவு பெற்ற கார்களுக்கான வாகன நுழைவு அனுமதி முறையை மலேசியா அமல்படுத்த தொடங்கி இருக்கிறது. மலேசிய அதிகாரிகள் ஜூலை 15 வரை பரிசோதனை அடிப்படையில் அந்தத் திட்டத்தை அமல்படுத்துகிறார்கள் என்பதால் கார்களுக்கு RM20 ($6.60) கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. அந்த அனுமதியைப் பெற 120,000க்கும் அதிக சிங்கப்பூர் கார் உரிமையாளர்கள் பதிந்திருக்கிறார்கள் என்று மலேசியாவின் பொதுப்பணி, கிராம, வட்டார மேம்பாட்டு குழுத் தலைவர் ஹாசினி முகம்மது தெரிவித்தார். "சோதனைச் சாவடிகளில் எல்லா வாகனத் தடங்களிலும் புகைப்பட கருவிகளும் உணர்வுச் சாதனங்களும் பொருத்தப்படுகின்றன. இவை பதிவு பெற்ற வாகனங்களுக்குக் கொடுக்கப்படும் வில்லைகளைப் படிக்கக்கூடியவை. வாகனங்களின் எண் தகடுகளையும் தெரிந்துகொள்ளக்-கூடியவை. சிங்கப்பூரைப் போல சிறப்பு கட்டணக் கழிவு எதையும் நாங்கள் கொடுக்கவில்லை," என்று அந்த அதிகாரி விளக்கினார்.
மலேசியாவில் பதிவு பெற்ற வாகனங்களுக்கான அனுமதி கட்டணத்தை சிங்கப்பூர் 2014ல் ஒரு வார நாளுக்கு $20லிருந்து $35க்கு உயர்த்தியது. இருந்தாலும் ஒவ்வொரு வாகனத்திற்கும் சிங்கப்பூரில் ஓராண்டில் 10 இலவச நாட்கள் அனுமதிக்கப்பட்டன. சிங்கப்பூருக்குள் மாலை 5 மணிக்கும் அதிகாலை 2 மணிக்கும் இடையில் நுழையும் கார்களும் வார முடிவு நாட்களிலும் பொது விடுமுறை நாட்களிலும் எப்போது வேண்டுமானாலும் சிங்கப்பூருக்குள் வரும் கார்களும் அனுமதி கட்டணம் எதையும் செலுத்த வேண்டாம். மலேசியா தன்னுடைய கட்டணத்தை அமல்படுத்துவதை திரும்பத் திரும்ப தாமதப்படுத்தி வந்துள்ளது.