கொல்லம்: கேரளாவில் கொல்லம் மாவட்டம் சதய மங்கலத்தைச் சேர்ந்த உல்முக், விஷாஹினா தம்பதியர் தங்கள் நிலத்திற்கு உரமாக அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரிடம் இருந்து சாணத்தை வாங்கினர்.
சாணத்தைப் பயிருக்குப் போட்டபோது இலியாஸ் என்ற பெயருடன் 5 பவுன் தங்கச் சங்கிலி ஒன்று அவர்கள் கையில் சிக்கியது. சங்கிலியை உரியவரிடம் ஒப்படைக்க அவர்கள் சமூக வலைத் தளங்களை நாடினர்.
சதயமங்கலத்தில் இருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ள துடயனூர் தெக்கில் என்ற கிராமத்தைச் சேர்ந்த இலியாஸ் என்பவருக்கு அந்த நகை சொந்தம் என்பது தெரிந்தது. சதயமங்கலம் போலிஸ் நிலையத்தில் இலியாஸிடம் சங்கிலியை உல்முக் ஒப்படைத்தார்.
இரு ஆண்டுகளுக்கு முன் இலியாஸ் வீட்டில் இலியாஸின் மனைவி தன் சங்கிலையைக் கழற்றி கீழே வைத்துவிட்டு பசுவுக்குப் புல் வைத்துக் கொண்டு இருந்தார். தங்கச் சங்கிலியைப் புல்லுடன் சேர்த்து மாடு தின்றுவிட்டது.
கொஞ்ச காலம் சங்கிலியைத் தேடி பிறகு இலியாஸ் தம்பதியர் அந்த முயற்சியைக் கைவிட்டு மாட்டையும் விற்றுவிட்டனர்.