பணம் செலுத்துவதற்காக வரிசையில் நிற்கும் ஒரு வாடிக்கையாளருக்கு ஒவ்வொரு விநாடியும் முக்கியம். இந்த நம்பிக்கையின் அடிப்படையில், கைபேசி கட்டணமுறைகளை வழங்கும் நிறுவனங்கள், கட்டணப் பரிவர்த்தனைக்காகும் நேரத்தைக் குறைக்க பல்வேறு முனைப்புகளை மேற்கொண்டு வருகின்றன. மின்னிலக்கக் கட்டணமுறைகளைப் பயன்படுத்த கடை ஊழியர்களுக்கு முறையாகப் பயிற்சி அளிக்கப்படவில்லை என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் ஒருவர் சென்ற வாரம் எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து, கைபேசி கட்டணமுறைகளின் பயன்பாட்டுச் சாதகம் ஒரு விவகாரமாக எழுந்தது.
முன்னாள் தொழில் இயக்குநரான 51 வயது லிம் டெக் கூன், டிபிஎஸ் வங்கியின் “பேலா!” செயலி மூலம் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்குச் சில கடைகளின் ஊழியர்களுக்குத் தானும் தனது மனைவியும் கற்றுத்தர வேண்டியிருந்ததாகக் கூறியிருந்தார். “அவர்களது கடைகளில் பேலா! பயன்படுத்த முடியும் என சேவை ஊழியர்களை நம்ப வைப்பதற்கும், பிறகு நெட்ஸ் சாதனத்தின்வழி அதைச் செய்ய கற்றுத் தருவதற்கும் எங்கள் நேரத்தை வீணாக்கினோம்,” என்று திரு லிம் எழுதியிருந்தார். இதன் தொடர்பில் பதிலளித்த நெட்ஸ் நிறுவனமும் டிபிஎஸ் வங்கியும், கட்டணச் சாதனங்களைப் பயன்படுத்த நெட்ஸ் நிறுவனம் வணிகக் கடைகளுக்குப் பயிற்சி அளிப்பதாகத் தெரிவித்தன.
மின்னிலக்கக் கட்டணமுறைகளை பத்தில் ஏழு சிங்கப்பூரர்கள் பயன்படுத்துவதாகவும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை தினமும் பெருகி வருவதாகவும் மெக்கின்ஸி அண்ட் கோ நிறுவன ஆலோசகர்கள் பிசினஸ் டைம்ஸ் செய்தித்தாளில் மே மாதம் எழுதிய கட்டுரை குறிப்பிட்டது.
இந்நிலையில், மின்னிலக்கக் கட்டணமுறையைப் பயன்படுத்துவதற்காகும் நேரத்தைக் குறைத்திருப்பதாக அச்சேவையை வழங்கும் நிறுவனங்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தன. வாடிக்கையாளர்கள் ஒளிவருடல் செய்து பணம் செலுத்தும் முறையைச் சில கடைகளில் அறிமுகப்படுத்தி வருவதாக கிராப் நிறுவனப் பேச்சாளர் தெரிவித்தார். ஃபேவ்பே சேவையின் நிர்வாக இயக்குநர் இங் ஆய்க்-பொங், செயலியின் பதிவேற்ற நேரத்தையும் படிநிலைகளையும் குறைத்திருப்பதாகத் தெரிவித்தார். ஒன்றரை ஆண்டுகளுக்குமுன் மின்னிலக்கக் கட்டணமுறையைப் பயன்படுத்தி பணம் செலுத்த சுமார் ஐந்து விநாடிகள் எடுத்தது. இப்போது ஓரிரு விநாடிகளில் பரிவர்த்தனையை முடித்துவிடலாம் என்றார் அவர்.
சிங்டெல், கிராப், ஃபேவ் ஆகியன கடைகளுக்குப் பயிற்சியும் அளிக்கின்றன. கடைகளிலேயே நேரடியாக ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கும் ஏற்பாட்டைக் கடைக்காரர்கள் தேர்ந்தெடுக்கலாம் என்றும், தொழில்நுட்ப உதவிக்கென தொலைபேசி சேவை இருக்கிறது என்றும் சிங்டெல் பேச்சாளர் தெரிவித்தார். கடை ஊழியர்கள் பற்றிய கடிதத்தை எழுதிய திரு லிம், புக்கிட் பாஞ்சாங் பிளாசாவிலுள்ள மிஸ்டர் பீன், ஹோம் ஃபிக்ஸ், கார்டியன் ஃபார்மசி, பெங்கவான் சோலோ ஆகிய கடைகளின் ஊழியர்களே மின்னிலக்கக் கட்டணமுறையின்வழி பணம் ஏற்க சிரமப்பட்டதாகக் குறிப்பிட்டார். மேலும் ஐந்து கடைகளில் சோதனை செய்தபோது, சிலவற்றுக்கு “கியூஆர்” குறியீட்டைப் பயன்படுத்தி பணம் ஏற்கத் தெரியவில்லை என்பது கண்டறியப்பட்டது.
நெட்ஸ் நிறுவனம் கட்டணச் சாதனத்தைப் பயன்படுத்த கற்றுத்தந்த போதிலும், அந்தச் சாதனத்தால் “கியூஆர்” குறியீட்டின்வழி பணம் ஏற்கமுடியும் என்பது தனக்குத் தெரியாது என்றார் ஹோம் ஃபிக்ஸ் கடையின் விற்பனையாளர். இரண்டு மாதங்களுக்குமுன் கார்டியன் ஃபார்மசியில் வேலை செய்யத் தொடங்கிய ஒருவர், “கியூஆர்” குறியீட்டைப் பயன்படுத்த சக ஊழியர் கற்றுக்கொடுத்ததாகச் சொன்னார்.