லண்டன்: உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இறுதிப் போட்டியின் கடைசி ஓவரில் ‘ஓவர் த்ரோ‘ மூலம் வந்த நான்கு ஓட்டங்களே இங்கிலாந்து அணி வெற்றிபெற முக்கிய காரணமாக அமைந்தது.
கடைசி ஓவரின் நான்காவது பந்தை எதிர்கொண்ட இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் (படம்), மட்டையால் பந்தைத் தட்டிவிட்டு ஓட்டமெடுக்க ஓடினார். அப்படி இரண்டாவது ஓட்டம் எடுத்தபோது, நியூசிலாந்தின் மார்ட்டின் கப்டில் விக்கெட் காப்பாளரை நோக்கி வீசிய பந்து ஸ்டோக்சின் மட்டையில் பட்டுத் திரும்பி, எல்லைக் கோட்டைக் கடந்து பவுண்டரி ஆனது.
ஸ்டோக்ஸ் ஓடி எடுத்த இரு ஓட்டங்களுடன் ‘ஓவர் த்ரோ‘வில் வந்த நான்கு ஓட்டங்களுடன் மொத்தம் ஆறு ஓட்டங்களை வழங்கினார் கள நடுவர் தர்மசேனா.
முக்கியமான தருணத்தில் ‘ஓவர் த்ரோ’ மூலம் நான்கு ஓட்டங்களை விட்டுக்கொடுத்தது நியூசிலாந்து அணி வீரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதனிடையே, ‘‘அந்த நான்கு ஓட்டங்கள் எங்களுக்குத் தேவை இல்லை. திரும்பப் பெற்றுக்கொள் ளுங்கள் என்று ஸ்டோக்ஸ், நடுவர்களைக் கேட்டுக்கொண்டார்,’’ என்று இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ‘பிபிசி’யிடம் சொன்னதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விதிப்படி, களக்காப்பின்போது எதிரணி வீரர் எறியும் பந்து பந்தடிப்பாளர் மீது அல்லது அவரது மட்டை மீது பட்டுத் திரும்பும் பட்சத்தில் அதை ‘ஓவர் த்ரோ’வாகக் கருத முடியாது. ஆனால், ஸ்டோக்ஸ் விவகாரத்தில் அவர் வேண்டுமென்றே பந்தைத் தடுக்காததால் ‘ஓவர் த்ரோ’ மூலம் கூடுதல் ஓட்டங்கள் வழங்கப்பட்டன.
சர்ச்சைக்கு ஐசிசி விளக்கம்
இதனிடையே, அந்த ‘ஓவர் த்ரோ’ சம்பவத்தில் ஆறு ஓட்டங்களுக்குப் பதில் ஐந்து ஓட்டங்களே வழங்கப்பட்டிருக்க வேண்டும் என சர்ச்சை எழுந்தது.
பிரபல முன்னாள் நடுவரான சைமன் டாஃபல், ‘‘இது நடுவர்களின் தவறு. பந்து ‘த்ரோ’ செய்யப்படும்போது பந்தடிப்பாளர் ஆடுகளத்தின் ‘கிரீஸை’ தாண்டி இருக்கவில்லை என்றால் அவர்களுக்கு ஓர் ஓட்டம்தான் வழங்கப்பட வேண்டும். அப்படிப் பார்த்தால் 5 ஓட்டங்கள்தான் வழங்கியிருக்க வேண்டும், ஆறு ஓட்டங்கள் வழங்கியிருக்கக்கூடாது,’’ என்றார்.
அப்படி ஐந்து ஓட்டங்கள் வழங்கப்பட்டு இருந்தால் ஸ்டோக்சுக்குப் பதிலாக எதிர்முனையில் இருந்த அடில் ரஷீத் அடுத்த பந்தை எதிர்கொண்டிருப்பார்.
இந்நிலையில், ‘‘விதிமுறைகளின் படியே கள நடுவர்கள் முடிவை அறிவிக்கின்றனர். அவர்கள் முடிவில் எந்தக் கருத்தும் கூறக்கூடாது என்பது கொள்கை முடிவு,’’ என்று அனைத்துலக கிரிக்கெட் மன்றம் விளக்கமளித்துள்ளது.