முழுநேர தேசிய சேவையாளர் கார்ப்பரல் கோக் யுயென் சின், 22, சென்ற ஆண்டு மே 13ஆம் தேதியன்று 12 மீட்டர் ஆழமுள்ள கிணற்றுக்குள் தள்ளப்பட்டு உயிரிழந்தார். தேசிய சேவையை முடித்ததைக் கொண்டாடும் நோக்கில் நடந்த கலாட்டாவில் கோக்கைத் கிணற்றுக்குள் தள்ளினார் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் அதிகாரி முகம்மது நூர் ஃபத்வா முகம்மது. கோக்கைக் கிணற்றுக்குள் தள்ள ஃபத்வாவைத் தூண்டியதன் தொடர்பில் முதலாவது வாரண்ட் அதிகாரி முகம்மது ஃபாரிட் முகம்மது சலே, 35, மீதான வழக்கு விசாரணை நேற்று தொடங்கியது.
சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவாகியுள்ள ஐந்து அதிகாரிகளில் ஃபாரிட்தான் கடைசி. சம்பவத்திற்கு முன் ஃபாரிட் கேக் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் என்றும் கிணற்றுக்குள் தன்னைத் தள்ளவேண்டாம் என்று கோக் குரல் கொடுத்தது ஃபாரிட் காதில் விழவில்லை என்றும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது. மரணம் விளைவித்த பொறுப்பற்ற செயலுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டை ஃபாரிட் மறுத்துள்ளார்.