சந்திராயன்-2 விண்கலம் திங்கட்கிழமை நிலவை நோக்கிப் புறப்பட்டது. இந்தியாவின் இந்த ஆக லட்சியவாத, சிக்கலான விண்வெளி பயணத்தின் பின்னணியில் பல திறமையான ஆண்களும் பெண்களும் உள்ளனர். நிலவில் விண்கலத்தைத் தரையிறக்கும் ஆகச் சவால்மிக்கச் சாதனையை, வழக்கமான செலவைவிட மிகக் குறைவான செலவில் சாத்தியப்படுத்திய நான்காவது நாடாக இந்தியாவுக்குப் பெருமை தேடித்தரக்கூடிய விண்கலப் பயணத்திற்காக இவர்கள் பல ஆண்டுகளாக அயராது உழைத்திருக்கின்றனர்.
இவர்களில் பல பெண் விஞ்ஞானிகளும் உள்ளனர். திட்டப்பணியின் இயக்குநர் முத்தையா வனிதாவின் பல ஆண்டுகால உழைப்பால் இந்தியாவின் இரண்டாவது நிலாப் பயணம் சாத்தியமானது. விண்கலத்தின் பயணத்தை வழிநடத்துபவர் இயக்குநர் ரிட்டு கரிடால். சிவில் பொறியாளரின் மகளும் மின்னணுவியல், தொடர்புத்துறை பொறியாளருமான எம்.வனிதா சென்னையைச் சேர்ந்தவர். இவர் இஸ்ரோவில் 32 ஆண்டுகாலம் பணியாற்றியிருக்கிறார்.
விண்வெளித்துறை பொறியாளரான ரிட்டு கரிடால், 22 ஆண்டுகாலம் இஸ்ரோவில் சேவையாற்றி வருகிறார். லக்னோவ் பல்கலைக்கழகத்திலும் பெங்களூருவிலுள்ள இந்திய அறிவியல் கழகத்திலும் பட்டம் பெற்ற இவர், இஸ்ரோவின் மங்கல்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவதில் முக்கிய பங்காற்றினார். இப்போது சந்திராயன்-2 பயணத்தை இவர் இயக்குகிறார்.
வனிதா, கரிடால் போல ஏகப்பட்ட பெண்கள் சந்திராயன்-2 பயணத்திற்காக உழைத்திருக்கின்றனர். இஸ்ரோவில் பணிபுரிவோரில் சுமார் 30 விழுக்காட்டினர் பெண்கள்.
“இஸ்ரோவில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் வேறுபாடுகளில்லை. அனைவருக்கும் சமமான பங்குண்டு. அனைவரும் பொறுப்புகளை ஏற்று பங்காற்றுகின்றனர்,” என்றார் இஸ்ரோவின் தலைவர் டாக்டர் கே.சிவன்.
விவசாயியின் மகனான டாக்டர் சிவன், 2017ல் நூற்றுக்கும் மேலான துணைக்கோளங்களை ஒரே சமயத்தில் விண்வெளியில் பாய்ச்சி இஸ்ரோ உலகச் சாதனை படைக்க துணை புரிந்தார்.
சந்திராயன்-2 விண்கலத்தின் பயணம் சென்ற வாரம் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டதற்குக் காரணமான இன்ஜின் பிரச்சனைக்குத் தீர்வு கண்டவர் டாக்டர் எஸ் சோமாநாத். திருவனந்தபுரத்தின் விக்ரம் சரபஹி விண்வெளி நிலையத்தின் இயக்குநர் இவர்.
இவர்களைப் போல இன்னும் பலர் சந்திராயன்-2 விண்கலத்தின் நிலவு பயணத்தின் பின்னணியில் பங்காற்றியுள்ளனர். விண்கலப் பயணத்தின் செலவு குறைவாக இருப்பதையும் இவர்கள் உறுதி செய்துள்ளனர்.
விண்கலப் பயணத்திற்காகச் சுமார் 140 மில்லியன் வெள்ளி செலவிடப்பட்டுள்ளது. மற்ற நாடுகள் இதுபோன்ற பயணத்திற்காகச் செலவிடும் பல பில்லியன் வெள்ளியோடு ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு.
இந்தியா நிலவில் தண்ணீர் தேடுவதற்காகக் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்குமுன் அனுப்பிய சந்திராயன்-1 விண்கலத்திற்குப் பிறகு இப்போது சந்திராயன்-2 அனுப்பப்பட்டுள்ளது.