பொது மக்களுக்கும் மேற்கத்திய நாட்டினருக்கும் இந்திய உணவின் மகத்துவத்தை எடுத்துக்கூறுவதற்கும் சைவ உணவுகளின் பல வகைகளைக் காட்சிப்படுத்தும் நோக்கத்திலும் ராஜ் உணவகம், 'வெஜ்திஸ்சிட்டி' (VegThisCity) எனும் உணவு சுற்றுலாப் பயணங்களை ஏற்பாடு செய்யும் நிறுவனத்துடன் இணைந்து 3.7 மீட்டர் ரவா தோசை ஒன்றை உருவாக்கி சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது.
"பெரும்பாலும் இந்தியர்கள் சைவ உணவையும், தென், வட இந்திய உணவு வகைகளையும் பற்றி நன்கு அறிவார்கள். மற்ற இனத்தவர்களுக்கும் நமது சைவ உணவின் ருசியை எடுத்துசெல்வது என் இலக்கு. எதுவும் சுலபமில்லை, இந்த சாதனையை ஏற்படுத்த நன்கு திட்டமிட்டு உழைத்தோம். அதற்கான அங்கீகாரமும் கிடைத்தது," என்றார் ராஜ் உணவகத்தின் இயக்குநர் திருமதி கேரன் ராஜா, 63.
சிங்கப்பூர் உணவு விழாவின் (Singapore Food Festival) ஓர் அங்கமாக, லிட்டில் இந்தியா வட்டாரத்தில் சைவ உணவு சுற்றுலாவுக்கு 'வெஜ்திஸ்சிட்டி' நிறுவனம் ஏற்பாடு செய்தது.
உள்ளூர்வாசிகள், சுற்றுப்பயணிகள் என சுமார் 15 பேர் நேற்று இந்த சுற்றுலாப் பயணத்தில் கலந்துகொண்டனர்.
ஏறத்தாழ 12 வித சைவ இந்திய உணவு வகைகளைச் சுவைத்ததோடு, சாதனை படைத்த தோசை யையும் சுவைத்து பார்த்தனர்.
"பல இந்திய உணவுகளையும் ரவா தோசையையும் முதல் முறையாக இன்று சாப்பிடுகிறேன். தென் இந்திய உணவில் பல வகைகள் இருப்பதை இன்றுதான் அறிந்தேன். ஆப்பம், பானி பூரி, ஆலு கோபி எனக்கு மிகவும் பிடித்த இந்திய உணவுகள்," என்றார் 20 ஆண்டுகளாக சைவமாக இருந்து வரும் சீனரான திருவாட்டி ஆங் ஹுவே,57.
ரவா தோசை மாவில், மிளகு, கறிவேப்பிலை, சீரகம் போன்ற உணவுப்பொருட்களைக் கொண்டு சிங்கப்பூரின் ஆக நீளமான தோசை சமைக்கப்பட்டது.
"14 வயதிலிருந்து தோசை செய்வதைப் பற்றி கற்றுக்கொண்டேன். பல ஆண்டுகளாக தோசை சுட்டு என் திறமையை வளர்த்துள்ளேன். இன்று அதை வெளிப்படுத்த தளம் கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன்," என்றார் ஏறத்தாழ 30 ஆண்டுகளாக சிங்கப்பூரிலும் இந்தியாவிலும் உள்ள ராஜ் உணவகங்களில் பணியாற்றி வரும் சமையற்கலை நிபுணர் திரு ஏசடியான் ஜெயசங்கர், 47.
"பயணிகளை வியப்பில் ஆழ்த்த விரும்பினேன். பொதுவாக தோசை என்றால் 30 சென்டிமீட்டர் அளவில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உண்டு. அந்த எதிர்பார்ப்பை உடைத்து, 15 பேர் உட்காரும் மேசையின் நீளத்தில் தயாரித்தோம்.
"இதுபோன்ற நிகழ்வுகள் இந்திய உணவுகளை மேலும் பிரபலப்படுத்துகிறது," என்றார் 'வெஜ்திஸ்சிட்டி' நிறுவனரான 37 வயது குமாரி ஏக்தா கேம்லானி.