ஹைதராபாத்: தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்தி நடிகர் சல்மான்கான் தொடர்பான வழக்குகளால் இந்திய நீதித்துறைக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இரு வழக்குகளில் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள், வழங்கப்பட்ட தீர்ப்புகள், மக்கள் மத்தியில் வசதி படைத்தவர்கள், அதிகாரம் உள்ளவர்களுக்கு விரைவாக பிணையும் தீர்ப்பும் கிடைக்கும் என்ற தவறான செய்தியை சொல்வதாகக் கூறியுள்ளார்.
"வழக்கத்துக்கு மாறாக இந்த இரு வழக்குகளும் அவசர, அவசரமாக விசாரணைக்கு ஏன் எடுத்து கொள்ளப்பட வேண்டும் என்ற கேள்வி பரவலாக கேட்கப்படுகிறது. இது போன்ற நிகழ்வுகளால் நீதித்துறைக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது. "இந்த இரு வழக்குகளிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு பிணை வழங்கிய நீதிபதிகள் பதவி ஓய்வு பெறும் நிலையில் இருந்தவர்கள். நூற்றுக்கணக்கான வழக்குகளில், சிறையில் வாடும் பலருக்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட பிணை கிடைப்பதில்லை," என சந்தோஷ் ஹெக்டே சுட்டிக்காட்டினார்.