(விளம்பரச் செய்தி)
பாசிர் பாஞ்சாங் சாலையில் இருந்த அலெக்சாண்ட்ரா பிரிக்வொர்க்சில் 1913ஆம் ஆண்டில் மரத்தாலான கட்டடம் ஒன்றில், சிறிய அளவில் நிறுவப்பட்ட ஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலயம், இன்று டெப்போ சாலையில் எழில்மிகு திருத்தலமாக உருமாற்றம் கண்டு, கம்பீரமாகக் காட்சி
அளிக்கிறது. அலெக்சாண்ட்ரா செங்கல் சூளையில் பணியாற்றிய திரு லட்சுமண நாடார் என்பவரே இந்த ஆலயம் நிறுவப்பட முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. பத்து ஆண்டுகளுக்குப் பின், அலெக்சாண்ட்ரா செங்கல் சூளையின் முதன்மை நிறுவனமான போர்னியோ நிறுவனத்தின் துணையுடன் மரக் கட்டடமாக இருந்த ஆலயம் செங்கல் கட்டடமாக மாறியது. அந்த செங்கல் சூளையில் பணியாற்றிய இந்து ஊழியர்களும் அக்கம்பக்கத்தில் குடியிருந்த மக்களும் வழிபடும் இடமாக இந்தத் திருத்தலம் விளங்கியது.
தொடக்கத்தில் திரு லட்சுமண நாடார் ஆலயத்தின் நிர்வாகப் பணிகளைக் கவனித்து வந்தார். அவரைத் தொடர்ந்து, திரு சோலை படையாச்சி, திரு பம்பய நாடார், திரு சண்முக தேவர், திரு பி.ராமசாமி ஆகியோர் ஆலயத்தை நிர்வகித்தனர். 1958ல் திரு ரெங்கையா தலைமையில் ஆலய நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது. அவருக்குப் பின் 1960ல் திரு நீலமேகம் பிள்ளை, 1963ல் திரு பி.ராமசாமி, 1967ல் திரு எஸ். காராளசிங்கம், 1969ல் திரு வி.சிவப்பிரகாசம் ஆகியோர் ஆலய நிர்வாகக் குழுவின் தலைமைப் பதவியை ஏற்றனர்.
பக்தர்கள் அளித்த நன்கொடைகளைக் கொண்டு ஆலயம் பராமரிக்கப்பட்டு வந்தது. போர்னியோ நிறுவனமும் பின்னர் அலெக்சாண்ட்ரா பிரிக்வொர்க்ஸ் நிறுவனமும் 1967ஆம் ஆண்டு முற்பாதி வரை ஆலயப் பணிகளுக்காக மாதந்தோறும் பத்து வெள்ளியைப் பல ஆண்டுகளாக வழங்கி வந்தன. பிரிக்வொர்க்ஸ் ஊழியர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியபின் பாசிர் பாஞ்சாங் மின்நிலைய இந்து ஊழியர்கள் ஆலயத்திற்கு ஆதரவு தந்தனர். ஆனாலும் சிறிது காலத்திற்கு ஆலய நடைமுறைச் செலவுகளைச் சமாளிக்கவே நிதி இல்லாமல் நிர்வாகம் தடுமாறும் நிலை ஏற்பட்டது.
1967ல் திரு காராளசிங்கம் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட புதிய நிர்வாகக் குழு, ஆலய வழிபாடுகளுக்கும் பூசாரியின் ஊதியத்திற்கும் இன்ன பிற செலவுகளுக்கும் நிதி திரட்ட பல வழிகளை வகுத்தது. பக்தர்களின் வசதிக்காக ஆலயக் கட்டடத்திலும் சில சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. சுதையால் செய்யப்பட்ட அம்மன் சிலைக்குப் பதிலாக கருங்கல்லால் ஆன சிலை நிறுவப்பட்டு, 1968ல் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. மறுஆண்டில் விநாயகப் பெருமானுக்கும் முருகப் பெருமானுக்கும் கருங்கல் சிலை நிறுவப்பட்டு, குடமுழுக்கு நடந்தேறியது.
பாசிர் பாஞ்சாங் மின்நிலையத்தில் பணியாற்றிய திரு கே. இராமன் நாயர் அம்மூன்று சிலைகளையும் இந்தியாவிலிருந்து தருவித்து, நன்கொடையாக வழங்கினார்.
ஈராண்டுகளுக்குப் பிறகு, 1972 ஜூன் 30ஆம் தேதிக்குள் ஆலயத்தை அவ்விடத்தில் இருந்து அகற்றும்படி அலெக்சாண்ட்ரா பிரிக்வொர்க்ஸ் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியது. அந்நிறுவனம் தனது சொத்துகளை சிங்கப்பூர் துறைமுக ஆணையத்திற்கு விற்க முடிவு செய்ததே அதற்குக் காரணம்.
ஆயினும், நீண்ட நெடிய பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஆலயத்தைக் காலி செய்வதற்கு $260,000 இழப்பீடு வழங்க பிரிக்வொர்க்ஸ் நிர்வாகம் ஒப்புக்கொண்டது. அதைத் தொடர்ந்து, புதிய ஆலயத்தை நிறுவும் வரையில் ஸ்ரீ ருத்ர காளியம்மன், விநாயகப் பெருமான், முருகப் பெருமான், ஸ்ரீ முனீஸ்வரர் ஆகிய நான்கு தெய்வங்களின் மூர்த்தங்கள் கன்டோன்மன்ட் சாலையில் இருந்த ஸ்ரீ மன்மத காருணீஸ்வரர் ஆலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டன.
புதிய ஆலயம்
டெப்போ சாலையில் புதிய ஆலயத்தை எழுப்ப 1978 பிப்ரவரி மாதம் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரியது.
அதனைத் தொடர்ந்து, 1980 அக்டோபர் 27ஆம் தேதி புதிய ஆலயத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கின. புதிய ஆலயத்தின் குடமுழுக்கு விழா 1983 செப்டம்பர் 11ஆம் தேதி சீரும் சிறப்புமாக நடந்தேறியது.
அதன்பின், சிங்கப்பூரிலேயே முதன்முறையாக சக்தி சமேத நவக்கிரக விக்கிரக சிலைகள் நிறுவப்பட்டு 1987 நவம்பர் 27ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது. 1988 ஏப்ரல் 22ஆம் தேதி கொடியேற்ற நிகழ்வு முதன் முதலாக இடம்பெற்றது.
இப்போதுள்ள கோவில் வளாகத்தினுள் திருமணம், சமூக, கல்வி, கலாசார நிகழ்வுகளை நடத்த வசதியாக ஐந்து தளங்களைக் கொண்ட கட்டடம் ஒன்றும் இருக்கிறது.
பல மொழி பேசுவோரும் வந்து வழிபடும் திருத்தலம்
இந்து சமயத்தைச் சேர்ந்த தமிழர்கள் மட்டுமின்றி மலையாளிகள், தெலுங்கர்கள், இந்திக்காரர்கள் உட்பட இந்தியர்கள் அனைவரும் வந்து வழிபடும் இடமாக இந்த ஆலயம் திகழ்ந்து வருகிறது.
ஆன்மிகப் பணிகளோடு சமூகப் பணிகளையும் ஆலயம் மேற்கொண்டு வருகிறது. ஆண்டுதோறும் அக்கம்பக்க வட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்குக் கல்வி உதவி நிதியும் உபகாரச் சம்பளமும் வழங்கப்படுகிறது.
அத்துடன், தியானம், தேவாரம், கர்நாடக இசை, பரதநாட்டியம், யோகா வகுப்புகளும் இங்கு நடத்தப்படுகின்றன.
சிங்கப்பூரில் குழுத் தொகுதிகளை அமைப்பது தொடர்பான மசோதா முன்மொழியப்பட்டபோது, சிறுபான்மை இந்தியச் சமூகத்தின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் அதில் சில திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூரர்கள் பலரை ஒரு குழுவாக அணிதிரளச் செய்து,