ஹாங்காங் போராட்டத்தின்போது போலிசார் சுட்ட ‘பீன்பேக்’ தோட்டா இளம் பெண் ஒருவரின் கண்ணில் பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சிம் ஷா சுயீ வட்டாரத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் காரணமாக அப்பெண்ணின் கண் மிக மோசமாகக் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெயர் குறிப்பிடப்படாத அந்தப் பெண் ஒரு துணை மருத்துவ அதிகாரி எனக் கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் அப்பெண்ணுக்கு உடனடியாக அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு நேற்று முன்தினம் காலை மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அப்பெண்ணுக்கு ஏற்பட்டிருக்கும் காயம் மிகவும் மோசமானது என்று மருத்துவர் உறுதிப்படுத்தியதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் நாளிதழ் தெரிவித்தது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக அவருக்கு நியாயம் கேட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.