நகரி: தெலுங்கானா மாநிலம் மெதக் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் இங்கு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது.
ஆழ்குழாய்க் கிணறு வறண்டதால் மூன்று நாட்களுக்கு ஒருமுறை லாரி மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. இதற்கு அதிக செலவு ஆகியது.
மாணவிகளுக்கு கூந்தல் நீளமாக இருப்பதால்தான் குளிப்பதற்கு அதிக தண்ணீர் செலவு ஆவதாகக் கருதி அங்கு தங்கி பயின்ற 180 மாணவிகளின் கூந்தலையும் வெட்ட தலைமை ஆசிரியர் அருணா ரெட்டி உத்தரவிட்டார். இதனால் அனைவருக்கும் ‘கிராப்பு கட்டிங்’ செய்யப்பட்டது.
இந்த நிலையில், நேற்று மாணவிகளைச் சந்திப்பதற்காக அவர்களது பெற்றோர்கள் வந்தனர். அப்போது தங்கள் பெண் குழந்தைகளின் கூந்தல் வெட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து ஆத்திரம் அடைந்த அவர்கள் தலைமை ஆசிரியருக்கு எதிராக பள்ளி முன்பு போராட்டத்தில் குதித்தனர். இதனால் பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.