ஹாங்காங்: சீனாவின் சென்சென் நகரில் உள்ள காற்்பந்துத் திடலில் சீனாவின் ராணுவ கவச வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. துணைக்கோளப் படங்கள் மூலம் இது தெரியவந்துள்ளது.
ஹாங்காங்கில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நீடிக்கும் வேளையில் இத்தகைய துணைக்கோளப் படங்கள் வெளிவந்துள்ளன. ஹாங்காங் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக சீனா அதன் படைபலத்தை பயன்படுத்தக்கூடும் என்று சிலர் அஞ்சும் வேளையில் இத்தகைய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஹாங்காங் அருகே எல்லைப் பகுதியில் உள்ள விளையாட்டுத் திடலைச் சுற்றிலும் சீன ராணுவத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கவச வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை துணைக்கோளப் படங்கள் காட்டின.
திட்டமிடப்பட்ட ராணுவ பயிற்சிக்காக அந்த கவச வாகனங்கள் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மற்றபடி ஹாங்காங்கில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சீனா தெரிவித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீன அரசாங்கம் ஹாங்காங் எல்லையை ஒட்டிய பகுதிக்கு அதன் ராணுவ வீரர்களை அனுப்பி வருவதாக அமெரிக்க உளவுத் துறையினர் நம்புவதாக டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஹாங்காங்கில் நீடிக்கும் ஆர்ப்பாட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர சீனா அதன் ராணுவத்தையோ அல்லது போலிஸ் படையையோ அங்கு அனுப்ப தயக்கம் காட்டி வந்துள்ளது.
இந்நிலையில் ஹாங்காங்கில் நீடிக்கம் ஆர்ப்பாட்டங்களை சமாளிக்கவும் அங்குள்ள போலிசாருக்கு உதவவும் சீனா உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீன ஊடகங்கள் வலியுறுத்தியுள்ளன.