புதிய இயக்குநர்களின் படங்களில் நடிப்பது சவாலான விஷயம் என்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
இதன் காரணமாகவே புது இயக்குநர்களை தமக்கு மிகவும் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
முத்துக்குமரன் இயக்கத்தில் விமல், வரலட்சுமி, யோகிபாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கன்னி ராசி’. நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருந்த இப்படம் இப்போது வெளியீடு காண உள்ளது.
இதையடுத்து இப்படக்குழுவினர் சென்னையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது இப்படம் தொடர்பான தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய வரலட்சுமி இந்தப் படத்தின் கதை தம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்ததாகக் குறிப்பட்டார்.
“இயக்குநர் முத்துக்குமரன் என்னிடம் கதைச் சொன்னபோது விழுந்து விழுந்து சிரித்தேன். நான் நடித்த ‘போடா போடி’க்குப் பிறகு நகைச்சுவை படங்களில் எதிலும் நடிக்கவில்லையே என்ற மனக்குறை இருந்தது. ‘கன்னி ராசி’ மூலம் அந்த மனக்குறை நீங்கியது,” என்றார் வரலட்சுமி.
படப்பிடிப்பின்போது அனைவரும் சிரித்துக்கொண்டே இருந்தனராம். இப்படி ஒரு நகைச்சுவைப் படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார் வரலட்சுமி. இந்தப் படம் காதல் திருமணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
“நான் எந்தப் படத்திலும் இவ்வளவு நடிகர்களுடன் இணைந்து நடித்ததில்லை. பாண்டியராஜன் சார், யோகிபாபு, ரோபோ சங்கர் எனப் பலருடன் சேர்ந்து ஜாலியாக நடித்தேன். விமல் சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது,” என்றார் வரலட்சுமி.
இது குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக் கூடிய ஜாலியான படம் எனக் குறிப்பிட்ட அவர், ஒரு புதிய இயக்குநரின் படத்துக்கு ரசிகர்கள் ஆதரவளிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
“நான் காதல் திருமணம் செய்வேனா? என்று கேட்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை திருமணமே வேண்டாம் என நினைக்கிறேன். நிஜ வாழ்க்கையில் எனக்கு விருப்பமில்லாத விஷயமென்றால் அது திருமணம்தான்.
“யாரையும் மணம் புரியும் எண்ணமில்லை. அதேசமயம் திருமணத்தை வேண்டாம் என்றுதான் சொல்கிறேனே தவிர, திருமணத்தை நான் வெறுக்கவில்லை,” என்றும் வரலட்சுமி மேலும் தெரிவித்தார்.
நடிகை வரலட்சுமி விஷாலை காதலிப்பதாக முன்பு கிசுகிசுக்கப்பட்டது.
எனினும் விஷாலுக்கு தற்போது திருமணம் நிச்சயமாகி உள்ளது.