உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடிகைகளில் ராஷி கண்ணாவும் ஒருவர். தினமும் காலை ஐந்தரை மணிக்கெல்லாம் விழித்துக் கொள்வாராம். அதே போல் இரவு ஒன்பது மணிக்கு படுகைக்கைக்குச் சென்றுவிடுவாராம்.
“தூங்கி எழுந்தவுடன் சுடுநீர் அருந்துவேன். எட்டு மணிக்குள் பசியாறிவிடுவேன். அதற்கு முன்னதாக ஒன்றரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது வழக்கம்.
“மதியம் ஒன்றரை மணிக்கு மதிய உணவு. இடையே ஒரு முறை பழரசம் அருந்துவேன். மாலையில் பழங்கள் சாப்பிட்டால், இரவு எட்டு மணிக்கு சப்பாத்தி போன்ற ஏதேனும் லேசான உணவோடு நிறுத்திக் கொள்வேன். எனது ஆரோக்கியம் மற்றும் கட்டான உடற்கட்டுக்கு இதுதான் காரணம்,” என்று ரகசியம் உடைக்கிறார் ராஷி.
பெண்கள் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என அறிவுறுத்துபவர், அதற்கேற்ப சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்.
தமிழ் அறவே தெரியாமல் கோடம்பாக்கத்தில் கால்பதித்த ராஷிக்கு , இப்போது தமிழ் ஓரளவு புரிகிறதாம்.
கொஞ்சமாக தமிழில் பேசவும் செய்கிறார். கூடிய விரைவில் தமிழில் சரளமாகப் பேச முடியும் என்று நம்புகிறாராம்.
“பொதுவாக நான் மறுநாள் நடிக்க வேண்டிய காட்சிகளுக்குரிய வசனத்தை முந்தைய நாள் மாலையே படக்குழுவிடம் கேட்டு வாங்கிவிடுவேன். அதன் பிறகு தமிழ் தெரிந்த தோழிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த வசனங்களுக்குரிய அர்த்தத்தை தெரிந்து கொள்வேன்.
“அதன் பிறகு அவற்றை எப்படிப் பேச வேண்டும், எந்த இடத்தில் நமது உணர்ச்சிகளைக் கச்சிதமாக வெளிப்படுத்த வேண்டும் என்பதையும் கேட்டு தெளிவடைவேன்.
“இப்படி பயிற்சி செய்வதால் படப்பிடிப்பின் போது எல்லாம் சுலபமாக நடந்து விடுகிறது. தமிழ் தெரியாவிட்டாலும் கச்சிதமாக நடிக்கிறீர்கள் என்று படக்குழுவினரும் பாராட்டுகிறார்கள்,” என்று கூறிச் சிரிக்கிறார் ராஷி.
கோடம்பாக்கத்தில் அனைவரும் அன்பாகப் பேசிப் பழகுவதாகக் கூறுபவர், தமிழ் ரசிகர்கள் ரசனைமிக்கவர்கள் என்றும் குறிப்பிடுகிறார்.
ராஷிக்கு இசையில் மிகுந்த ஆர்வம் உண்டாம். பாடகியாக வேண்டும் என்று விரும்புகிறார். சிறு வயது முதலே இப்படியொரு ஆசை உள்ளதாம். ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாட வேண்டும் என்பதும் வாழ்நாள் கனவு என்கிறார்.
“விஜய், தனுஷ், சிம்பு ஆகியோர் நன்றாகப் பாடுகிறார்கள். எனக்கும் அவர்களைப் போல் பெயரெடுக்க ஆசை. நிச்சயம் ஒரு நாள் இது நிறைவேறும் என்று நம்புகிறேன்,” என்று சொல்லும் ராஷிக்கு, தமிழில் பிடித்தமான நடிகர் என்றால் அது அஜீத் தானாம்.
அவரது அழகான சிரிப்புக்கு இணையே இல்லையாம்.
இந்தியில் ஷாரூக்கானை மிகவும் நேசிப்பதாகச் சொல்கிறார். ஷாரூக்கின் படங்களை ஒன்று விடாமல் பார்த்து விடுவாராம். அதிலும் காதல் காட்சிகளை மனப்பாடம் செய்து வைத்திருக்கிறார்.
‘இமைக்கா நொடிகள்’, ‘அடங்க மறு’ ஆகியவற்றைத் தொடர்ந்து, இரண்டு புதுப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் ராஷி.
ஓய்வு நேரத்தில் கவிதையும் எழுதுவாராம்.
“என்னிடம் மறைந்துள்ள திறமைகளில் இதுவும் ஒன்று. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலக பெண்கள் தினத்தையொட்டி ஒரு கவிதையும், உலக கவிதைகள் தினத்தன்று ஒரு கவிதையும் எழுதினேன்.
“அவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பின்னர் அவ்வப்போது கவிதைகள் எழுதி வருகிறேன். என்றேனும் ஒரு நாள் அவற்றை ஒரு தொகுப்பாக வெளியிடும் திட்டமும் உள்ளது,” என்கிறார் ராஷி.
வெளிப்புறப் படப்பிடிப்பின் போது ரசிகர்கள் தன்னை அடையாளம் கண்டுகொள்வது ராஷியை ரொம்பவே உற்சாகப் படுத்துகிறது.
“அதிலும் தமிழ் ரசிகர்கள் காட்டும் அன்பு என்னை நெகிழ வைக்கிறது. இதற்காக சினிமாவுக்கு நன்றி சொல்ல வேண்டும்,” என்கிறார் ராஷி.