புதுடெல்லி: காங்கிரஸ் போன்ற வலிமையான கொள்கைகள் கொண்ட ஒரு கட்சியால்தான் சமயவெறி கொண்ட பாஜகவை எதிர்கொள்ள முடியும் என நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நேரு குடும்பத்தினரைத் தவிர மற்றவர்கள் காங்கிரசை வழிநடத்துவது கடினம் என்றார். பாரதிய ஜனதா தற்போது மாநிலக் கட்சிகளை வலுவிழக்கச் செய்து வருவதாக குற்றம் சாட்டிய அவர், இது ஒரு கொள்கையற்ற செயல் என்றார்.
“இதே நிலை நீடித்தால் மாநிலக் கட்சிகள் தங்கள் முக்கியத்துவத்தை இழந்துவிடும். இதனால் நாடு இரு துருவ அரசியல் தலைமையை நோக்கிச் செல்லும். அவ்வாறு இரு துருவ அரசியல் வந்துவிட்டால் நாங்கள்தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். எனவே, காங்கிரசுக்குப் பிரகாசமான எதிர்காலம் உள்ளது,” என்றார் ஆதிர் ரஞ்சன்.
சோனியா காந்தி கட்சிக்கு மீண்டும் தலைமை ஏற்க தயக்கம் காட்டியது உண்மைதான் என்று குறிப்பிட்ட அவர், ராகுல் காந்தி பதவி விலகியதால் கட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து மூத்த தலைவர்கள் சோனியாவிடம் விவரித்ததாகத் தெரிவித்தார்.
எனினும் சோனியா காந்தி காங்கிரசின் இடைக்காலத் தலைவராக மட்டுமே பொறுப்பேற்றுள்ளதாக ஆதிர் ரஞ்சன் தெளிவுபடுத்தினார். கட்சிக்குப் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் முயற்சிகள் நீடித்து வருகின்றன என்றார் அவர்.