தாய்லாந்தின் தேசிய விமான நிறுவனமான ‘தாய் ஏர்வேஸ்’, அந்நாட்டின் புதிய மன்னர் மஹா வஜ்ஜிரலொங்கோர்னின் முடிசூட்டு விழாவைக் கொண்டாடிட, தனது விமானத்தின்மீது அகலமான ஓவியம் ஒன்றைப் பொறித்துள்ளது.
புதிய மன்னரின் பட்டமளிப்புக்கான கொண்டாட்டங்களின்போது தனது விசுவாசத்தையும் பெருமையையும் வெளிபடுத்த ‘தாய் ஏர்வேஸ்’ பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக விமான நிறுவனத்தின் தலைவர் சுமெத் டம்ரோங்சைதம் தெரிவித்தார்.
தாய்லாந்து மன்னர் பயணம் செய்யும் சுபான்னஹோங் கப்பலை வரைவதற்கான அனுமதியை அந்த விமான நிறுவனம் பெற்றுள்ளது. ஓவியம் வரையப்பட்ட அந்த போயிங் 777-300 ரக விமானத்திற்கு, ராஜகுரு ப்ரா பிதி ஸ்ரீ விசுதிகுன் புனித சடங்கு ஒன்றை நடத்தி ஆசிர்வாதம் வழங்கினார்.
புதிய மன்னரின் பட்டமளிப்பு விழாவுக்கான கொண்டாட்டங்கள் 2020 மே மாதம் 4ஆம் தேதி வரை அதிகாரபூர்வமாக நீடிக்கும்.