இஸ்லாமிய சமயத்தில் ஹஜ், உம்ரா ஆகிய புனித யாத்திரைப் பயணங்கள் முக்கியமாக கருதுப்படுகின்றன. இப்பயணங்களை வசதியாக்குவது உட்பட சிங்கப்பூரில் இந்திய முஸ்லிம்களுக்காக தமிழில் சேவைகளை வழங்கி வரும் ஓரே நிறுவனமாகத் திகழ்கிறது ‘எவர்ஷைன் டிராவல்ஸ் அண்ட் சர்வீசஸ்’ என்ற தனியார் நிறுவனம்.
15 ஆண்டுகளாக இயங்கி வரும் எவர்ஷைன் நிறுவனம், 2012ஆம் ஆண்டில் அதிகாரபூர்வ பயண முகவர் உரிமத்தைப் பெற்றது.
“சிங்கப்பூரில் பெரும்பாலும் முஸ்லிம்களுக்காக யாத்திரைப் பயணச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மலாய் இனத்தவர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. இந்திய முஸ்லிம்களுக்கான சிறப்பு வசதிகள் இருக்காது,” என்றார் எவர்ஷைன் இயக்குநரான ஹாஜி அப்துர் ரஹீம், 55.
தமிழ் பேசும் பயண வழிகாட்டி, இந்திய உணவு, டார் ஆல் குஃப்ரான் எனும் ‘5-ஸ்டார்’ ஹோட்டல் போன்ற அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகிறது எவர்ஷைன்.
“சொகுசாக இருப்பதுடன் நம் ஏற்பாடுகளின் மூலம் பயணிகளின் சிரமத்தைக் குறைக்கவும் முனைகிறோம். நாம் ஏற்பாடு செய்யும் ஹோட்டலுக்கு மிக அருகே, ஏறத்தாழ 15 மீட்டர் தூரத்தில் வழிபாட்டு இடம் ஒன்று உள்ளது. குறிப்பாக முதியோர் போன்ற உடல் பல
வீனமானவர்களுக்கு இதுபோன்ற வசதிகள் பெரிதும் பயனளிக்கின்றன,” என்று கூறினார் ஹாஜி ரஹீம்.
கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக நீடிக்கும் ஹஜ் யாத்திரை பயணம் மேற்கொள்வதற்கு ஒருவருக்கு ஏறத்தாழ S$14,000 செலவாகும். அதே சமயம் 12 நாட்கள் நீடிக்கும் உம்ரா பயணத்திற்குக் குறைந்தது S$2,890 செலவாகிறது.
“பயணச் சேவைகள், உணவு, தங்கும் இடங்கள், வழிகாட்டுதல், காப்புறுதி, விமான சேவைகள் போன்றவை தரமானதாக வழங்கப்படுகின்றன,” என்று நம்பிக்கையளித்தார் ஹாஜி அப்துர் ரஹீம். யாத்திரைப் பயணங்கள் உட்பட பொதுமக்களுக்கான விடுமுறை சுற்றுலாக்களையும் எவர்ஷைன் நிறுவனம் வழங்குகிறது. மலேசியா, இந்தியா, தாய்லாந்து, இலங்கை, துபாய், துருக்கி, ஜெருசலம், ஜோர்தான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலாக்களை ஏற்பாடு செய்யலாம்.
பயணங்களின் எண்ணிக்கை நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் உச்சக்கட்ட நிலையை அடையும் என்றார் அவர். அந்த கட்டத்தில் ஒரு மாதத்தில் 200 முதல் 300 பயணிகள் வரை எவர்ஷைனின் சேவைகளை நாடுகின்றனர்.
“தரமான, நிபுணத்துவ சேவைகள் வழங்கி வருவதால் நம்மை நாடி வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது,” என்று கூறினார் ஹாஜி அப்துர் ரஹீம். தனியாக பயணம் செல்லும்போது மருத்துவத் தேவைகள் ஏற்பட்டால் அதற்கு அந்நபர் தனியாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் பதிவு செய்யப்பட்ட பயண முகவருடன் செல்லும்போது அவர்கள் தேவையான ஏற்பாடுகளை செய்து உதவி புரியலாம் என்றும் அவர் தெரிவித்தார்.