மலேசியாவின் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் பயணப்பதிவு முகப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறால் சேவை தாமதங்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. விமானங்கள் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்னரே விமான முனையத்தைச் சென்று சேருமாறு பயணிகளுக்கு விமான நிலைய அதிகாரிகள் ஆலோசனை விடுத்துள்ளனர்.
விமானத் தகவல்களைத் தெரிவிக்கும் மின்திரை, நுழைவுச் சீட்டுகள் வழங்கும் முகப்புச் சேவைகள், பெட்டிகளைக் கையாளும் இயந்திரங்கள், இணையத் தொடர்பு போன்றவை பாதிக்கப்பட்டதாக மலேசிய விமான நிலைய நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. இவற்றை நிலைப்படுத்த தனது குழுவினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்நிறுவனம் கூறியது.
தாமதங்களைத் தவிர்க்க பயணிகள் நான்கு மணி நேரம் முன்கூட்டியே விமான நிலையத்தை அடைந்து தங்களது பயணப்பதிவுகளைச் செய்துகொள்ளுமாறு மலேசிய விமான நிலைய நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.