‘என்எஸ் சதுக்கம்’ என்ற ஒரு புதிய நிரந்தர இடத்தை கட்டுவதற்கான திட்டம் 2025ல் மூன்றாவது காலாண்டில் முடிக்கப்பட்டு அந்தச் சதுக்கம் உரிய அமைப்பிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.
மரினா பே மிதக்கும் மேடைக்கு (படம்) பதிலாக அந்தச் சதுக்கம் கட்டப்பட இருக்கிறது. ஏலக்குத்தகைப் பத்திரங்களைப் பார்த்தபோது இந்த விவரங்கள் தெரியவந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
அண்மைய ஆண்டுகளில் தேசிய தின அணிவகுப்புகள் நடந்து வந்துள்ள மரினா பே மிதக்கும் மேடை 2022 ஜனவரியில் இருந்து இடிக்கப்படக்கூடும்.
அதற்கு முன்னதாக அந்த இடத்தில் அடுத்த ஆண்டும் 2021ஆம் ஆண்டிலும் இரு தேசிய தின அணிவகுப்புகள் நடக்கும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் நேற்று அறிவித்தார்.
வரலாற்றையும் மரபுகளையும் ஒட்டி 2019 தேசிய நாள் அணிவகுப்பு பாடாங்கில் நடந்தது. 2020, 2021ஆம் ஆண்டுகளில் அணிவகுப்பு மரினா பே மிதக்கும் மேடை யில் நடக்கும். பிறகு அது மூடப்பட்டு புதிய ‘என்எஸ்’ சதுக்கம் கட்டப்படும் என்று ஃபேஸ்புக்கில் அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
புதிதாக கட்டப்படவிருக்கும் சதுக்கத்தில் 30,000 பேர் முதல் 35,000 பேர் வரை அமர்வதற்கான இடவசதி இருக்கவேண்டும் என்பது ஏலக்குத்தகைப் பத்திரங்களில் இடம்பெற்றுள்ள நிபந்தனைகளில் ஒன்று. புதிய சதுக்கத்தில் நீர் முகப்பு விளையாட்டுகளுக்கான வசதிகளும் இருக்கவேண்டும்.
பலநோக்குத் திடல், உடற்பயிற்சிக்கான இடம் உள்ளிட்டவையும் இருக்கவேண்டும்.
சிங்கப்பூரில் தேசிய சேவை தொடங்கப்பட்டு 2017ல், 50 ஆண்டுகள் பூர்த்தியாயின. மரினா பே மிதக்கும் மேடைக்கு ‘என்எஸ்’ சதுக்கம் என்று பெயரிடப்படும் என்றும் அதனுடன் தேசிய சேவையின் பரிணாம வளர்ச்சியைச் சித்தரிக்கும் கலைக்கூடம் ஒன்றும் இடம்பெறும் என்றும் அப்போது பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.