ஹாங்காங்: ஹாங்காங்கின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவது மிகவும் வருத்தத்துக்குரியது என்று சீனாவால் ஆட்சி செய்யப்படும் அந்த நகரத்தின் தலைவர் கேரி லாம் தெரிவித்துள்ளார். வன்முறையை மேலும் தீவிரப்படுத்துவதன் மூலம் ஹாங்காங்கின் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது என்றார் அவர்.
ஹாங்காங்கில் போராட்டங்கள் தொடர்கின்றன. கடந்த வாரயிறுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலிஸ் அதிகாரிகளுக்கும் இடையே மோதல்கள் மோசமடைந்தன.
சன்னல்களை உடைப்பது, தெருக்களில் பொருட்களுக்குத் தீமூட்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட, அவர்களைக் கலைக்க போலிசார் கண்ணீர்ப் புகை வீசினர்.
“சீனாவின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் ஹாங்காங்கின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவது வருத்தத்துக்குரியது.
“ஹாங்காங்கின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா அதன் மூக்கை நுழைக்கவிடமாட்டோம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஹாங்காங்கில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்னால் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர். அமெரிக்கக் கொடியைப் பறக்கவிட்டு ஹாங்காங்கில் ஜனநாயகத்தை நிலைநாட்ட அமெரிக்கா உதவ வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
சிறப்பு அமெரிக்க வர்த்தக, பொருளியல் சலுகைகளைப் பெற ஹாங்காங்கிற்கு சீனாவிடமிருந்து போதுமான சுதந்திரம் உள்ளதா என்பதை ஆண்டுதோறும் மதிப்பிட வகை செய்யும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றம் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் ஜனநாயகம் கோரி போராட்டத்தில் இறங்கியோரைப் பிடிக்க கலவரத் தடுப்பு போலிசார் எம்டிஆர் ரயில் நிலையத்துக்குள் அதிரடியாக நுழைந்தபோது உயிர்ச் சேதம் ஏற்பட்டதாக வெளியான தகவல்களை ரயில் சேவை நடத்தும் நிறுவனம் மறுத்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதியன்று பிரின்ஸ் எட்வர்ட் எம்டிஆர் நிலையத்தில் யாரும் மரணமடையவில்லை என்று எம்டிஆர் கார்ப் தெரிவித்தது.
போராட்டங்கள் தொடங்க காரணமாக இருந்த சர்ச்சைக்குரிய நாடு கடத்தல் மசோதாவை திருவாட்டி லாம் கடந்த வாரம் மீட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, ஹாங்காங் சமூக ஆர்வலர் ஜோஷ்வா வோங்கை ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஹேய்கோ மாஸ் சந்தித்துப் பேசியதை சீனா கடுமையாகச் சாடியுள்ளது.
அமைச்சர் மாஸை ஜெர்மன் தலைநகர் பெர்லினில் வோங் நேற்று சந்தித்தார். ஹாங்காங்கில் சுதந்திரமான முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காக தமது போராட்டத்தைத் தொடரப் போவதாக வோங் கூறினார்.