முகம்மது ஃபைரோஸ்
பயங்கரவாத மிரட்டல்களுக்கு இடையே வலுவான சமூகப் பிணைப்பைக் கட்டிக்காப்பதும் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்குவதும் மிகவும் முக்கியமானவை என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் கூறியுள்ளார். "சிங்கப்பூர் கட்டிக்காத்து வரும் சமூக ஒற்றுமையை நாம் மெத்தனமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. கடந்த ஓராண்டில் மட்டும் பேங்காக், பாரிஸ், பிரசல்ஸ், ஜகார்த்தா, இஸ்தான்புல், லாகூர், அண்மையில் ஒர்லாண்டோ என பல பயங்கரவாதத் தாக்குதல்களைப் பார்த்துள்ளோம். "தீவிரவாதிகளோ அல்லது அவர்களைப் பின்பற்றுபவர்களோ எக்காரணத்தைக் கொண்டும் நமது அமைதியையும் ஒற்றுமையையும் குலைக்க நாம் வழிவிடக் கூடாது," என்று வலியுறுத்திய டாக்டர் இங், சிங்கப்பூரர் ஒவ்வொருவருக்கும் இன, சமய ஒற்று மையை வலுப்படுத்தும் பொறுப்பு இருப்பதை மறுக்கலாகாது என்றும் கூறினார்.
ஜாமியா சிங்கப்பூர் அமைப்பு நேற்றிரவு ஏற்பாடு செய்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் டாக்டர் இங், சிங்கப்பூர் ஆயுதப்படை அதிகாரிகள் சிலருடன் பங்கேற்றார். "அண்டை வீட்டாருடன் நாம் வெளிப்படுத்தும் செயல்களும் பரிமாற்றங்களும் ஒரு வலுவான, தாக்குப்பிடிக்கக் கூடிய, அனைத்து சமய, கலாசார நடைமுறைகளை ஏற்றுக்கொள்ளும் சமூகத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை," என்றார் அமைச்சர்.
"இத்தருணத்தில் சிங்கப்பூர் ஆயுதப்படையில் இருக்கும் முஸ்லிம் படை வீரர்களுக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நோன்பைக் கடைப்பிடிக்கும் அதே வேளையில் சிங்கப்பூரைப் பாதுகாக்கும் தங் கள் கடமையில் இருந்தும் முஸ்லிம் வீரர்கள் சளைப்பதில்லை. அவர்கள் இலகுவான பணிகளையோ சிறப்புச் சலுகையையோ கேட்பதில்லை. முஸ்லிம் படை வீரர்கள் கடுமையான பயிற்சியிலும் நலமாக இருப்பதில் அவர்களின் படைத் தலைவர்கள் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள்.
நேற்றிரவு நடந்த ஜாமியா சிங்கப்பூர் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்களுடன் தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென். படம்: தற்காப்பு அமைச்சு