பிலிப்பீன்ஸைச் சேர்ந்த ஒரு பணிப்பெண், தனது இந்திய இனத்து முதலாளியிடமிருந்து கிட்டத்தட்ட 14,000 வெள்ளி மதிப்பிலான ஆபரணங்களைக் களவாடினார். 33 வயது ஜெனிஃபர் பரண் கம்போவாவுக்கு எதிரான மூன்று திருட்டுக் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு நேற்று எட்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதில் மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.
கம்போவா, 2017ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 48 வயது கிருத்திகா ராதாகிருஷ்ணனின் வீட்டில் பணிபுரியத் தொடங்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. திருவாட்டி ராதாகிருஷ்ணன் தமது ஆபரணங்களைச் சொந்தப் படுக்கை அறையிலுள்ள பாதுகாப்புப் பெட்டிகளில் வைத்திருந்தார். பலமாகக் பூட்டப்பட்டிருந்த அந்தப் பெட்டிகளிலிருந்து அந்தப் பணிப்பெண் எப்படி ஆபரணங்களை எடுத்தார் என்பது தெளிவாக இல்லை.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் திருவாட்டி ராதாகிருஷ்ணன் தனது ஆபரணங்கள் காணாமல் போனது குறித்து புகார் செய்தபோது கம்போவாவின் திருட்டு அம்பலமானது. அப்போதும்கூட கம்போவா டிசம்பர் மாதத்தில் 180 வெள்ளி மதிப்புள்ள ஒரு ஜோடி தோடுகளைக் களவாடினார்.
கம்போவா இவ்வாண்டு மே மாதம் 10ஆம் தேதி கைது செய்யப்பட்டார். தனக்காக வாதாட வழக்கறிஞர் இல்லாத கம்போவா, குடும்ப வறுமையின் காரணமாகத் தாம் அவ்வாறு செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.