மாமல்லபுரத்துக்கு நேற்று மாலை சென்ற இந்தியப் பிரதமர் மோடி, சீன அதிபர் ஸி ஜின்பிங் ஆகியோர் அங்குள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுலா இடங்களான அர்ஜுனன் தபசு, பஞ்ச ரதங்கள், கடற்கரைக் கோயில் ஆகியவற்றைப் பார்வையிட்டு வியந்தனர்.
இதற்காக, சீன அதிபர் ஸி ஜின்பிங் தனி விமானத்தில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அவரைத் தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித், முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோருடன் அதிகாரிகளும் வரவேற்றனர். அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பும் தமிழக முறைப்படி பூர்ண கும்ப மரியாதையும் அளிக்கப்பட்டது.
விமானநிலையத்தில் பரதநாட்டியம், பொய்க்கால் குதிரை போன்ற நடனங்களுடன் மேளதாளம், நாதசுவரம் இசை முழங்க சீன அதிபருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏராளமான கலைஞர்கள் நடன நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
விமானநிலையத்தில் இருந்து தனி கார் மூலம் கிண்டியில் உள்ள ஐடிசி சோழா நட்சத்திர ஓட்டலுக்குச் சென்ற திரு ஸி, மாலையில் அங்கிருந்து புறப்பட்டு மாமல்லபுரம் சென்றார்.
அதிபர் ஸியைச் சந்திப்பதற்காக புதுடெல்லியிலிருந்து நேற்று காலை பிரதமர் மோடி சென்னை வந்து சேர்ந்தார். அவரைத் தமிழக ஆளுநர், முதல்வர், துணைமுதல்வர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அதிபர் ஸி மாமல்லபுரம் சென்றபோது வழி நெடுகிலும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பள்ளி மாணவர்கள் இந்திய, சீன கொடிகளை அசைத்து வரவேற்பு நல்கினர்.
பிரதமர் மோடியும் அதிபர் ஸியும் அர்ஜுனன் தபசு சிற்பங்களைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது கறுப்பு நிற நாய் ஒன்று அந்த வழியாகக் கடந்து சென்றதால் அங்கு பரபரப்பு நிலவியது.
நேற்று மாலை மாமல்லபுரம் சென்ற இரு தலைவர்களும், அங்கு கலாசேத்ரா சார்பில் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தனர். அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் அதிபர் ஸிக்கு, பிரதமர் மோடி இரவு விருந்து அளித்தார். தக்காளி ரசம், அரைத்துவிட்ட சாம்பார், கடலை குருமா, கவுனி அரிசி அல்வா போன்றவை உட்பட பல தென்னிந்திய, குறிப்பாக தமிழக உணவு வகைகள் விருந்தில் பரிமாறப்பட்டன.
பிரதமர் மோடி, சீன அதிபர் ஸி ஜின்பிங் இடையேயான சந்திப்பு மொத்தம் 6 மணிநேரம் நடைபெறும் என்றும் ஒவ்வொரு சந்திப்பும் சுமார் 40 நிமிடங்கள் வரை நடக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இன்று பிஷர்மேன் கோவ் ரிசார்ட்டில் இரு தலைவர்களும் சந்தித்துப் பேச உள்ளனர். வட்டார, அனைத்துலக விவகாரங்கள், பிரச்சினைகள், எல்லைப்புற சிக்கல்கள், வர்த்தகம், இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துதல் ஆகியவை குறித்து இரு தலைவர்களும் பேசுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பிற்பகல் 12.45 மணிவாக்கில் அதிபர் ஸி சீனாவுக்குப் புறப்படுவார்.