மலேசியர்களான 27 வயதுப் பெண், அவரது 11 வயது மகன் ஆகியோரின் கொடூர கொலையின் தொடர்பில் அந்தப் பெண்ணின் கணவரான சிங்கப்பூரரை மலேசிய போலிசார் கைது செய்துள்ளனர். சிங்கப்பூர் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அந்த சந்தேகப் பேர்வழி நேற்று கைது செய்யப்பட்டதாக மலாக்கா போலிஸ் தலைமை துணை ஆணையர் மாட் காசிம் கரிம் கூறினார்.
குற்றவியல் சட்டப் பிரிவு 302ன்கீழ் விசாரணைக்காக அந்த ஆடவர் மலாக்காவுக்குக் கொண்டுசெல்லப்பட்டிருப்பதாக திரு கரிம் கூறினார்.
குருபோங்கில் உள்ள கம்போங் லடாங்கில் நேற்று முன்தினம் பிற்பகல் 4.30 மணியளவில் 37 வயதான புல் வெட்டுபவர் ஒருவர், துண்டாடப்பட்ட பல உடல் பாகங்களைச் சாலை ஓரத்தில் கண்டார்.
தாமன் மெர்டேக்காவைச் சேர்ந்த தாயும் மகனும் சில நாட்களுக்கு முன்பு கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. குருபாங்கில் உள்ள காட்டுப் பகுதியிலும் மேலும் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.