திறந்த மின்சாரச் சந்தை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகமானதிலிருந்து பத்தில் நான்கு குடும்பங்கள் மின்சார சில்லறை விற்பனையாளரிடம் இருந்து மின்சாரத்தை வாங்கி உள்ளனர் என்று எரிசக்திச் சந்தை ஆணையம் நேற்று தெரிவித்தது. இந்த மாற்றத்தால் பெரும்பாலான குடும்பங்கள் மகிழ்ச்சி தெரிவித்திருப்பதாகவும் எரிசக்திச் சந்தை ஆணையத்தின் ஆய்வு ஒன்று கூறுகிறது.
மின்சார சில்லறை விற்பனையாளரிடம் இருந்து மின்சாரத்தை வாங்கியுள்ள 10,000 குடும்பங்களிடம் நடத்தப்பட்ட வாடிக்கை யாளர் திருப்தி ஆய்வின் முடிவில் இந்த விவரங்கள் தெரியவந்தன.ஆய்வில் பங்கேற்றவர்களில் 85 விழுக்காட்டினர் சில்லறை மின்சார விற்பனையாளர் வழங்கிய சேவையில் திருப்தி கண்டதாகவும் 98 விழுக்காட்டினர் சில்லறை மின்சார விற்பனையாளருக்கு மாறிய முறை எளிதாக இருந்த தாகவும் தெரிவித்திருந்தனர்.
வீடுகளில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் பொதுவாக மின்சாரக் கட்டணம், ஒப்பந்தம் தொடங்கும் மற்றும் முடிவுபெறும் தேதிகள், பாதுகாப்பு வைப்புத்தொகை ஆகியவை பற்றி தெரிந்து வைத் திருந்தனர் என்றும் சில்லறை மின்சார விற்பனையாளர் தனது சலுகைகளைத் தெளிவாகக் குறிப்பிட்டனர் என்றும் கூறினர்.