அண்மையில் சிங்கப்பூர் விளையாட்டு மையத்தில் நடைபெற்ற நட்புமுறை காற்பந்து ஆட்டங்களின்போது திடலுக்குள் அத்துமீறி இறங்கிய ரசிகர்கள் போலிசிடம் ஒப்படைக்கப்பட்டதாக விளையாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் பிரேசிலுக்கும் செனகலுக்கும் இடையே நடைபெற்ற நட்புமுறை ஆட்டத்தின்போது ரசிகர்கள் சிலர் திடலுக்குள் இறங்கியது குறித்து ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த விளையாட்டு மையம் இந்த விவரங்களைத் தெரிவித்தது.
சிங்கப்பூருக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே நேற்று முன்தினம் நடைபெற்ற உலகக் கிண்ணத் தகுதிச் சுற்று ஆட்டத்தின்போது ரசிகர் ஒருவர் திடலுக்கும் பார்வையாளர் இருக்கைகளுக்கும் இடையே உள்ள பகுதிக்கு விரைந்தார்.
உஸ்பெகிஸ்தான் ரசிகர்களை முற்றுகையிட்ட அவரை அங்கிருந்து பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், திடலில் அத்துமீறி இறங்குவது உள்ளிட்ட பாதுகாப்பு சம்பவங்களைத் தான் கடுமையாகக் கருதுவதாக விளையாட்டு மையம் தெரிவித்தது.
விளையாட்டாளர்கள், ரசிகர்களின் பாதுகாப்பே தங்களின் முன்னுரிமை என்றும் அரங்கிற்குள் நுழையும் எல்லாரும் பாதுகாப்புச் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர் என்றும் அது குறிப்பிட்டது.