வேலூர்: நில உரிமையாளருக்குக் கொடுக்க வேண்டிய தொகையை அரசாங்கம் கொடுக்காததால் அரசாங்கத்தின் பேருந்துகளை நீதிமன்ற அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வேலூரில் ஒரே நேரத்தில் 10 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு முடக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாயினர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், வேலூர் மாவட்டம் ஆம்பூரில் பேருந்து பணிமனை அமைப்பதற்காக தங்கவேல், 74, கிரிஜம்மாள், 74, என்ற தம்பதிக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை 1993ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. ஆனால் அதற்கான இழப்பீடு வழங்கப்படவில்லை.
தம்பதியர் தங்களுக்கு வர வேண்டிய ரூ.1 கோடியே 75 லட்சம் இழப்பீடு தொகையைக் கேட்டு வழக்குத் தொடுத்தனர்.
வழக்கு நீடித்தது. பணத்தைக் கொடுக்கும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசாங்கம் அதற்குக் கீழ்படியவில்லை.
கடைசியாக பேருந்துகளைப் பறிமுதல் செய்யும்படி நீதிமன்றம் கடும் கட்டளை பிறப்பித்ததை அடுத்து அதிகாரிகள் 10 பேருந்து களைப் பறிமுதல் செய்தனர். மேலும் 9 பேருந்துகள் பறிமுதலாகும் என்று அவர்கள் தெரிவித்தனர்.