புக்கிட் பாத்தோக் வீட்டில் தீப்பற்றியபோது தீயணைப்பாளர்களால் பயன்படுத்த இயலாமல்போன நீர்ப்பீய்ச்சும் ரப்பர் குழாய்கள் சம்பவத்திற்கு இரு வாரங்களுக்கு முன்பு வரை நல்ல நிலைமையில் இருந்ததாக ஜூரோங்-கிளமெண்டி நகர மன்றம் விளக்கி உள்ளது. இம்மாதம் 1ஆம் தேதி புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 21 புளோக் 210Aன் 13வது தளத்தில் தீப்பற்றி எரிந்தது.
விரைந்து வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் அந்த வீட்டின் சமையலறை சன்னலுக்கு வெளி விளிம்பிலிருந்து 60களிலும் 30களிலும் வயதில் இருந்த இருவரை மீட்டனர். அதற்காக 60 மீட்டர் உயர ஏணி பயன்படுத்தப்பட்டது.
தீயை அணைப்பதற்காக அந்த புளோக்கில் வைக்கப்பட்டு இருந்த நீர்ப்பீய்ச்சும் ரப்பர் குழாய்கள் அடைத்து வைத்து பூட்டப்பட்டு இருந்ததாகவும் ஒரு பூட்டை உடைத்து குழாய்களை எடுத்தபோது அதிலிருந்து தண்ணீர் வரவில்லை என்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (எஸ்சிடிஎஃப்) கூறியிருந்தது. இருப்பினும் படையின் அவசர வாகனங்களில் இருந்த தண்ணீர் மூலம் தீ அணைக்கப்பட்டது.
இது குறித்து நேற்று விளக்கிய ஜூரோங்-கிளமெண்டி நகர மன்றத்தின் பொது மேலாளர் ஹோ தியன் போ, அந்த புளோக்கில் 64 ரப்பர் குழாய்கள் இருந்ததாகத் தெரிவித்தார்.
அக்டோபர் 14ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்ட குத்தகையாளரால் சோதிக்கப்பட்ட அவை அனைத்தும் நல்ல நிலைமையில் இருப்பதாக அப்போது சான்றளிக்கப்பட்டதாக அவர் கூறினார். இருப்பினும் எஸ்சிடிஎஃப் குறிப்பிட்டிருக்கும் தண்ணீர் குழாய்கள் அப்போது வேலை செய்யவில்லை என்பதை ஒப்புக்கொள்வதாகவும் அது தொடர்பான விசாரணை நடந்து வருவதாகவும் திரு ஹோ கூறினார்.