பிரேசிலியா: சீனாவுடனான இந்திய உறவு புத்தெழுச்சியுடன் புதிய பாதையில் செல்லத் தொடங்கியுள்ளது என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி பிரேசில் சென்றுள்ளார். பிரேசிலியா நகரில், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி கூறுகையில், “மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. உங்களை முதன்முறையாக பிரேசிலில் தான் சந்தித்தேன். அதுமுதல் நமது பயணம் தொடர்கிறது. நமக்கு இடையிலான பயணம்,
தற்போது நெருங்கிய நட்பாக வளர்ந்துள்ளது. என்னை உங்களது சொந்த கிராமத்திற்கு அழைத்துச் சென்றீர்கள். வூஹான் நகரில் வந்து என்னை வரவேற்றீர்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையிலான நட்பு நம்பிக்கைக்கு வித்திட்டது. நீங்கள் கூறியபடி, சென்னையில் நடந்த சந்திப்பானது, நமது பயணத்தில் புதுப் பாதையையும் புத்தெழுச்சியையும் அளித்துள்ளது,” என பிரதமர் மோடி கூறினார்.