16 வயது நிரம்பிய மாணவன் தனது பிறந்த நாளில் தான் பயிலும் பள்ளிக்குச் சென்று அங்கு தானியங்கித் துப்பாக்கியால் சக மாணவர்களை நோக்கி சரமாரியாகச் சுட்டதில் இருவர் மரணமடைந்துள்ளனர், மூவர் காயமடைந்தனர்.
பின்னர், துப்பாக்கியில் இருந்த கடைசி தோட்டாவால் தன்னைச் சுட்டுக்கொண்டான்.
இதில் அந்த மாணவன் கடுமையான தலைக் காயத்துடன் உயிருக்குப் போராடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் கூறுகிறது.
கலிஃபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்துக்கு 65 கிலோமீட்டர் வடக்கேயுள்ள சான்டா கிளேரிட்டா என்ற இடத்திலுள்ள சாகுஸ் என்ற உயர்நிலைப் பள்ளியில் நடந்த இந்த சம்பவத்தில் என்ன காரணத்தினால் அந்த மாணவன் சரமாரியாக சக மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான் என விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச்சூடு நடைபெற்று உயிர்ப்பலி ஏற்பட்டுள்ள கனெக்டிக்கட் மாநில சேண்டி ஹுக்ஸ் ஆரம்பப் பள்ளி, கொலாராடோ மாநில கொலம்பைன் உயர்நிலைப் பள்ளி, புளோரிடா மாநில மார்ஜரி ஸ்டோன்மென் டக்ளஸ் உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் நடந்த துப்பாக்கிச்சூடு போன்று தற்பொழுது சாகுஸ் பள்ளியில் நடைபெற்றிருப்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
“இந்தத் துயரச் சம்பவத்திலிருந்து நாம் எப்படி வெளிவரப் போகிறோம்? இனி இதுபோல் நடக்கக்கூடாது என நாம் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். இது பெரும் துயரத்தைத் தரும் சம்பவம். இதுபோல் அடிக்கடி நிகழ்கிறது,” என்று சான்டா கிளேரிட்டா ஷெரிஃப் நிலையத்தின் கேப்டன் ராபர்ட் லுவிஸ் உணர்ச்சி பொங்க பத்திரிகையாளர் பேட்டியின்போது தெரிவித்தார்.
இந்தத் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவன் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அவன் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவன் என்று மட்டும் போலிசார் தெரிவித்துள்ளனர். எனினும், அவன் தனிமனிதனாகச் செயல்பட்டான் என்றும் அவன் வீட்டை சோதித்துப் பார்த்து வேறு எந்த அபாயமும் இல்லை என போலிசார் தெரிவித்ததாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.
துப்பாக்கிச்சூட்டில் 16 வயது மாணவியும் 14 வயது மாணவனும் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், 14, 15 வயதுடைய இரு மாணவியரும் 14 வயது மாணவன் ஒருவனும் காயமடைந்ததாக அறியப்படுகிறது.
“துப்பாக்கிச்சூடு தொடர்பான காணொளியில் மாணவன் ஒருவன் தனது முதுகுப் பகுதியில் மாட்டிக்கொண்ட ஒரு பையிலிருந்து துப்பாக்கியை எடுத்து சக மாணவர்களைச் சுட்டுவிட்டு தன்னைத் தானே சுட்டுக்கொண்டது நன்கு தெரிகிறது,” என்று லாஸ் ஏஞ்சலிஸ் பகுதி ஷெரிஃப் நிலையத்தைச் சேர்ந்த கேப்டன் கென்ட் வேக்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கினார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity