தீபாவளி திருநாளை சமூகத்துடனும் ஒன்றிணைந்து கொண்டாடும் நோக்கில் தோ பாயோ கிழக்கு-நொவீனா தொகுதி இந்திய நற்பணி குழு மற்றும் அடித்தளஅமைப்புகள் ஒன்று சேர்ந்து “தீப திருநாள்” கொண்டாட்டத்தை சென்ற 10ஆம் தேதி தோ பாயோ கிழக்கு சமூக மன்றத்தில் ஏற்பாடு செய்திருந்தன.
இந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் ஆடல் பாடல்களோடு, இந்து கலாச்சாரம் பற்றிய கேள்வி பதில் அங்கம், விளையாட்டுப் போட்டி, மூளை தளர்ச்சி நோய் (Dementia) விழிப்புணர்வு பேச்சு போன்றவை இந்நிகழ்ச்சியில் இடம் பெற்றது.
நிகழ்ச்சியின் சிறப்பு அங்கமாக சீன அன்பர் ஒருவர் தமிழில் இருபாலினர் குரலில் பாடி அனைவரையும் இன்ப வெள்ளத்தில் திகைக்க வைத்தார்.
இக்கொண்டாட்டத்தில் வசதி குறைந்தவர்கள், மற்ற இனத்தவர்கள் ஆகியோருடன் வெளிநாட்டு ஊழியர்களும் பங்கேற்று மகிழ்ந்ததாக நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திருமதி தமிழரசி கூறினார்.
எட்டு வகைகள் கொண்ட சைவ, அசைவ விருந்துணவும் பரிமாறப்பட்டது.
குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்துப் பேசிய, அத்தொகுதியின் அடித்தள ஆலோசகர் திரு சக்தியாண்டி சுப்பாட், “சிங்கப்பூரர்கள் இன, மத நல்லிணக்க மேம்பாட்டில் மனதை செலுத்துவதோடு, மூளைத் தளர்ச்சி நோயால் அவதியுறுவோருக்கு உதவிக்கரம் நீட்டுவதிலும் அந்நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் அக்கறை செலுத்த வேண்டும். இதுபோன்ற சமூக மன்ற நிகழ்ச்சிகள் பல்லின சமுதாயத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும்” என்று கூறினார்.