திருவனந்தபுரம்: சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் மண்டல பூசை மற்றும் மகர விளக்குப் பூசைக்காக கடந்த 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அன்று இரவு வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மறுநாள் (17 ஆம் தேதி) மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டு மண்டல பூசை தொடங்கியது. மண்டல பூசை முதல் மகரவிளக்குப் பூசை வரை 2 மாத காலம் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறந்திருக்கும் என்பதால் விரதம் இருந்த ஐயப்ப பக்தர்கள் கோயிலில் குவியத்தொடங்கி உள்ளனர்.
முதல் நாள் மட்டும் 50,000 பேர் சுவாமி ஐயப்பனைத் தரிசனம் செய்தனர். மறுநாளில் இந்த எண்ணிக்கை எழுபது ஆயிரமானது. அதிகமான பக்தர்கள் வருகையையொட்டி அதிகாலை 3.30 மணிக்குத் திறக்கப்பட்ட கோயில் நடை தற்போது 3 மணிக்கே திறக்கப்பட்டு நெய் திருமுழுக்கு உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெறுகின்றன.