மதுரை: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் புதிய கட்சிகள் சேர வாய்ப்புள்ளதாகத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமெரிக்கப் பயணத்தின்போது தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு உதவ அமெரிக்க வாழ்த் தமிழர்களோடும், முதலீட்டாளர்களிடமும் பேசப்பட்டது.
அவர்களும் இங்கே வருவதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
உலக வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களிடமும் தமிழக வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பேசியுள்ளோம்.
அவர்களும் ஒப்புதல் தந்துள்ளனர். உலக வங்கிக் குழு தமிழகம் வருவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்கப் பயணம் முழு வெற்றி பெற்றுள்ளது. வீட்டுவசதி வாரியத்தின் மூல மாக வீடு இல்லாத ஏழைகளுக்கு முதற்கட்டமாக ரூ.5,000 கோடியில் வீடுகள் கட்டித்தரப்படும். இப்பணி முடிந்ததும், மேலும் ரூ.5,000 கோடியில் பணிகள் நடக்கும். உசிலம்பட்டி 58ஆம் கால்வாய்த் திட்டம் தொடர்பாகத் திமுக ஆட்சிக் காலத்தில் தவறான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி வைகை அணை நிரம்பி வழியும்போதும், ராமநாதபுரம் பெரிய கண்மாய் நிரம்பி வழியும்போதும்தான் 58ஆம் கால்வாயில் தண்ணீர் எடுக்க முடியும். நிலைமையைக் கூர்ந்து கவனித்து வருகிறோம். ஏற்கெனவே உள்ள ஆயக் கட்டுகளுக்கு எந்தவிதப் பாதிப்பும் இன்றி, இருக்கும் நீரை 58ஆம் கால்வாய்க்கு எவ்வாறு வழங்குவது என ஆய்வு நடந்து வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது பற்றி கேட்ட கேள்விக்கு, “புதிதாக யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். இதனால், அதிமுகவுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது. எத்தனை கட்சிகள் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது,” என்றார்.
கூட்டணி பற்றி கூறுகையில், “மக்களவைத் தேர்தலின்போது ஏற்படுத்தப்பட்ட கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும். இருப்பினும் புதிய கட்சிகளும் அதிமுகவுடன் கைகோக்க ஆர்வம் காட்டி வருகின்றன. அதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து கொண்டுள்ளது. அந்தப் பேச்சுவார்த்தை நல்லவிதமாக அமைந்தால் புதிய கட்சிகளுடன் கூட்டுச் சேரும் வாய்ப்பு உண்டு. அரசியலில் எதுவும் நடக்கலாம். அதிமுகவில் தகுதி உள்ளோருக்கு மட்டுமே தொகுதி ஒதுக்கப்படும்,” என்றார் அவர்.