ஆப்பிரிக்க நாடான சூடானில் திரவ எரிவாயுக் கலன் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் தமிழ்நாட்டினர் ஆறு பேர் உட்பட 18 இந்தியர்கள் கொல்லப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டினர் மூவர் மாண்டுவிட்டதாகவும் மூவரைக் காணவில்லை என்றும் வேறு ஒரு செய்தி கூறுகிறது.
இந்த நிலையில், அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து தமிழர்களின் நிலை பற்றி தெரியப்படுத்துமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி அவசர வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.
சூடான் நாட்டில் கார்ட்டூம் என்ற இடத்தில் உள்ள செராமிக் கற்கள் நிறுவனத்தில் சுமார் 50 இந்தியர்கள் பணியாற்றி வந்தனர். அங்கு திரவ எரிவாயுவைக் கீழே இறக்கியபோது எதிர்பாராத விதமாக வாயு கசிந்து தீப்பிடித்தது.
அந்தச் சம்பவத்தில் 23 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 18 பேர் இந்தியர்கள் என்றும் அந்த இந்தியர்களில் ஆறு பேர் தமிழ்நாட்டினர் என்றும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
கடலூர் மாவட்டம் மானடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர், 35, நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரியை அடுத்த ஆலங்குடிச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ராமகிருஷ்ணன் ஆகியோர் மாண்டவர்களில் அடங்குவர்.
இதனிடையே, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடர்வதாகவும் தூதரக அதிகாரிகள் உடனிருந்து பல உதவிகளைச் செய்து வருவதாகவும் தெரிவித்தார். மாண்டவர்களுக்கு இந்தியப் பிரதமர் மோடி, முதல்வர், திமுக தலைவர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity