சென்னை: தமிழ்நாட்டுச் சாலைகளில், சுமார் 8 ஆண்டு காலத்தில் நடைபாதைகளிலும் நடையர் சாலை கடப்புகளிலுமே பாதசாரிகள் அதிகமாக விபத்துகளில் சிக்கி இருக்கிறார்கள்.
நடையர்கள் சம்பந்தப்பட்ட விபத்துகளில் 80 விழுக்காடு அத்தகைய இடங்களில் நிகழ்ந்து இருக்கின்றன என்று ஐஐடி சென்னை நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
தமிழக அரசு போக்குவரத்து திட்ட ஆணையத்தின் புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு அந்த ஆய்வு நடத்தப்பட்டது. அந்த மாநிலத்தில் 2009ஆம் ஆண்டுக்கும் 2017ஆம் ஆண்டுக்கும் இடையில் நிகழ்ந்த 15 லட்சம் பாதசாரிகள்-வாகன விபத்துகளை அந்த ஆய்வு பகுத்து ஆராய்ந்தது.
அந்த விபத்துகளில் குறைந்பட்சம் கால்வாசி விபத்துகள் உயிர்கொல்லி விபத்துகளாக இருந்தன.
10 விபத்துகளில் ஒரு விபத்து கடுமையான காயம் விளைவித்ததாக இருந்தது. பெங்களூரைத் தளமாகக் கொண்ட தேசிய நரம்பியல் மற்றும் மனநலக் கழகம் என்ற அமைப்பு 2017ல் ஓர் ஆய்வை நடத்தியது. சாலை விபத்துகளில் சிக்கியவர்களில் 40 விழுக்காடு வரைப்பட்டவர்கள் பாதசாரிகள் என்று அந்த ஆய்வு தெரிவித்தது.
‘இந்தியாவில் 2018ல் சாலை விபத்துகள்’ என்ற போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சின் அறிக்கை ஒன்றை பார்க்கையில், 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2018ல் சாலை விபத்துகள் 0.46 விழுக்காடு அதிகரித்து இருக்கின்றன என்பது தெரிய வருகிறது.
சென்ற ஆண்டில் ஆக அதிக சாலை விபத்துகள் நிகழ்ந்த மாநிலம் தமிழ்நாடுதான் என்பதால் ஐஐடி சென்னையைச் சேர்ந்தவர்கள் தமிழக சாலை விபத்துகள் பற்றிய பகுப்பாய்வை நடத்தினார்கள்.
சாலையோர நடையர் வழிகளில் மோட்டார் வாகனங்கள் செல்வதே பாதசாரிகள் அதிகம் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது.