ப. பாலசுப்பிரமணியம்
சுமார் 39 ஆண்டுகளுக்கு முன் கருப்பை பிரச்சினையால் பாதிக்கப்பட்ட திரு நந்தகுமார் கேபிரியலின் தாயாரது உயிரைக் காப்பாற்ற உடனடியாக ரத்தம் தேவைப்பட்டது. அப்போது திரு கேபிரியலுக்கு 14 வயதிருக்கும். "அன்று ரத்த தானத்தைப் பற்றி கேட்பது அரிது. ஆனாலும் அம்மாவின் உயிரைக் காப்பாற்ற ஐந்து பேர் ரத்தம் கொடுக்க முன்வந்தனர்," என அச்சம்பவத்தை நினைவுகூர்ந்தார் திரு கேபிரியல். தக்க சமயத்தில் கிடைத்த ரத்த தானத்தால் அம்மா உயிர் பிழைத்தார் என்பதை உணர்ந்த திரு கேபிரியல், பிறருக்கும் இந்த உதவி கிடைக்க வேண்டும் என நினைத்தார். 18 வயதிலிருந்து ரத்த தானம் செய்ய ஆரம்பித்தார்.
இன்றுவரை இவர் 160 தடவைகள் ரத்த தானம் செய்திருக்கிறார். இவருடன் இவரது மனைவி, மகன், இரு மகள்கள் என குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே ரத்த தானம் செய்து வருகின்றனர்.
நிதி ஆலோசகராக பணியாற்றும் 53 வயது திரு கேபிரியல் ரத்த தானத்தைப் பற்றிப் பேசி னாலே மக்களிடம் ஒருவித பயம் ஏற்படுகிறது என்றார். ஊசி பயம், ஆரோக்கியம் பாதிப்படையும், ரத்தம் கொடுத்தால் உடல் பருமனாகும் என்ற பல அச்சங்கள் மக்களிடம் உள் ளன என்றார் திரு கேபிரியல்.
நல்ல ஆரோக்கியம் இருந்தால் தான் ரத்த தானம் செய்ய முடியும். ஆதலால் அடிக்கடி ரத்தம் கொடுப்பது நல்ல ஆரோக்கியத்திற்கு சான்றிதழ் என்பது இவர் கருத்து. வாரத்தில் இருமுறை பூப்பந்து விளையாட்டில் ஈடுபடும் திரு கேபிரியல் ரத்த தானம் எந்தவிதத்திலும் தனது ஆரோக்கியத்தைப் பாதித்ததில்லை என்றும் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்க இது ஒரு பரிசோதனை போன்று இருக்கிறது என்றும் விவரித்தார். முன்பு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் நேரான படுக்கை யில் இருந்தவாறு ரத்தம் கொடுத்ததையும் அது ஒரு 'போத்தலில்' சேகரிக்கப்பட்டதையும் நினைவுகூர்ந்த திரு கேபிரியல், இப்போது ரத்த தானம் செய்வது எளிமை யாகிவிட்டதென்றார்.
இன்று ரத்தம் சேகரிக்க அதி நவீன கருவிகள் பயன்படுத்தப்படு கின்றன. குளிர்சாதன வசதியுடன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியைப் பார்த்தவாறு ரத்தம் கொடுக்க முடிகின்றது. ரத்த தானம் செய்பவர் களை நன்கு கவனித்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய் வதில் கவனம் செலுத்தப்படுகிறது என்று கேபிரியல் விளக்கினார். 'தேவைப்பட்டால் ரத்தம் கொடுக்க யாராவது முன்வருவர்' என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. ஆனால் அப்படித் தேவைப் படும்போது ரத்தம் கிடைக்காவிட்டால் பிறரைக் குறைகூறுவது சரியல்ல," என்றார் திரு கேபிரியல். மக்களிடையே ரத்த தானம் குறித்த மனப்போக்கு மாற வேண்டும். சிறுவயதிலேயே இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால்தான் நிலைமை மாறும் என்பது கேபிரியலின் நம்பிக்கை.