இம்மாதம் 1ஆம் தேதியிலிருந்து நடைபாதைகளில் மின்ஸ்கூட்டர் ஓட்டத் தடை விதிக்கப்பட்டதையடுத்து நான்கு நாட்களில் மொத்தம் 24 மின்ஸ்கூட்டர் ஓட்டுநர்கள் பிடிபட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவிலிருந்து சனிக்கிழமை காலை வரை புக்கிட் பாஞ்சாங், ஜூரோங் ஆகிய பகுதிகலில் தனது அதிகாரிகள் அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஆணையம் நேற்று (5ஆம் தேதி) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.
குறிப்பாக, தடையை மீறி நடைபாதைகளில் மின்ஸ்கூட்டர் ஓட்டியவர்களைத் தடுத்து நிறுத்தும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். குற்றம் புரிவோருக்கு $2,000 வரை அபராதமோ மூன்று மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனையோ அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
“ஆக அண்மைய அமலாக்க நடவடிக்கையில் ஒரு சில தனிநபர் நடமாட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏனெனில், அனுமதிக்கப்பட்ட 20 கிலோ கிராம் எடையைவிட அவை அதிகமாக இருந்தன,” என்று ஆணையம் விவரித்தது.
நடைபாதைகளில் மின்சைக்கிள்களை ஓட்டிய ஒரு சிலரும் பிடிபட்டதாக ஆணையம் தெரிவித்தது. சாலைகளிலும் சைக்கிள் பாதைகளிலும் மட்டுமே மின்சைக்கிளை ஓட்ட அனுமதி உண்டு.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity