தொகுதி எல்லை மறுஆய்வுக் குழுவின் அறிக்கை (இபிஆர்சி) இன்னும் தயாராகவில்லை என்றும் அது தயாரானதும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார்.
“இபிஆர்சி குழு தனது பணியை முடித்த பிறகு, அதை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும். பொதுமக்களுக்கும் அது வெளியிடப்படும்,” என்று பிரதமரின் சார்பில் திரு சான், அல்ஜுனிட் குழுத் தொகுதி உறுப்பினரான பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் கேட்ட கேள்விக்கு எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.
பிரதமர் லீ கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நியமித்த இபிஆர்சி குழுவுக்குப் பிரதமரின் செயலாளர் தலைமை வகிக்கிறார். அடுத்த பொதுத் தேர்தலுக்கான முதற்படியாக அது கருதப்படுகிறது. இக்குழுவின் அறிக்கை வரும் பொதுத் தேர்தலில் தொகுதிகள் எவ்வாறு வரையறுக்கப் பட்டுள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டும். அதற்கு அடுத்தபடியாக அதிபர் நாடாளுமன்றத்தைக் கலைத்து, தேர்தல் நடத்தும் ஆணையைப் பிறப்பிப்பார்.
இந்த முறை இபிஆர்சி குழு குழுத் தொகுதிகளின் அளவை மேலும் குறைத்து அதிகமான தனித்தொகுதிகளை உருவாக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த பொதுத் தேர்தல் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தப்பட வேண்டும்.